திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம்: பெட்ரோல் குண்டு வீசி கொன்றுவிட்டு ஏ.சி. எந்திரம் வெடித்ததாக நாடகம் மனைவியுடன் மூத்த மகன் கைது


திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம்: பெட்ரோல் குண்டு வீசி கொன்றுவிட்டு ஏ.சி. எந்திரம் வெடித்ததாக நாடகம் மனைவியுடன் மூத்த மகன் கைது
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 9:43 PM GMT)

திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவத்தில் மனைவியுடன் மூத்த மகன் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 60). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி கலைச்செல்வி(52). இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர்.

கோவர்த்தனன், திண்டிவனம் நகர அ.தி.மு.க. மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையே கோவர்த்தனனுக்கும், செஞ்சி பகுதியை சேர்ந்த தீபகாயத்திரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

3 பேர் பலி

இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி அதிகாலை கலைச்செல்வியும், கவுதமும் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். ராஜி, வீட்டின் வராண்டாவில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. இதுதொடர்பாக கோவர்த்தனனிடம் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், தானும், தனது மனைவியும் வேறொரு அறையில் படுத்து தூங்கியதாகவும், மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறி இருந்தார். மேலும் இதுதொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாளியில் பெட்ரோல் வாசனை

ஆனால் சம்பவம் நடந்த அறையில் கிடந்த உடைந்த பாட்டில்களின் துகள்கள், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் கலைச்செல்வியின் தம்பியான கேணிப்பட்டை சேர்ந்த ஜெயசங்கர்(43) என்பவர், சொத்து தகராறு காரணமாக 3 பேரையும், கோவர்த்தனன் கொலை செய்து இருக்கலாம் என போலீசாரிடம் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜியின் உடலில் கத்தி வெட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 3 பேரும் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

கணவன், மனைவி கைது

இதைத்தொடர்ந்து கோவர்த்தனனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு அவரது மனைவி தீபகாயத்திரியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கடந்த 15-ந் தேதி அதிகாலை ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த அறையில் 3 பெட்ரோல் குண்டுகளை கோவர்த்தனன் வீசியுள்ளார். அந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததால் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகி அந்த அறையிலேயே பலியானார்கள்.

ராஜி மட்டும் பின்பக்க கதவு வழியாக வெளியே வந்து கதறியுள்ளார். அவரை, கோவர்த்தனன் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பெற்றோர் மற்றும் தம்பி இறந்து விட்டதாகவும் கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்திரி நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.

கோவர்த்தனன் வாக்குமூலம்

கோவர்த்தனன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

சிறுவயதில் இருந்தே தம்பி கவுதமைத்தான் எனது பெற்றோருக்கு ரொம்ப பிடிக்கும். அவன் எதை கேட்டாலும் வாங்கி கொடுப்பார்கள். என்னை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தினர். எனக்கும், தீபகாயத்திரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எளிமையாக திருமணம் நடத்தினர். ஆனால் எனது தம்பிக்கு, அடுத்த மாதம் ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

மேலும், சொத்து பிரச்சினையும் ஏற்பட்டது. கவுதமுக்கு தான் அதிக சொத்து கொடுக்கப்போவதாக பெற்றோர் கூறி வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என எண்ணினேன். இதனால் தாய், தந்தை, தம்பி ஆகியோரை திட்டமிட்டு கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

Next Story