வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு : அமேதியில் ராகுல்காந்தி தோல்வி குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து


வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு :  அமேதியில் ராகுல்காந்தி தோல்வி குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து
x
தினத்தந்தி 24 May 2019 11:26 PM GMT (Updated: 24 May 2019 11:26 PM GMT)

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 38-வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பின்னர் பேட்டியளித்தார். அப்போது கே.எஸ்.அழகிரியிடம் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வி அடைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு. ஒரு தலைவர் ஒரு தொகுதியில் வெற்றி பெறவில்லை என்பதற்காகவே அவரது கொள்கை நிராகரிக்கப்பட்டது என்று சொல்லக்கூடாது. நிறைய தலைவர்கள் வெற்றிவாய்ப்பை இழந்து இருக்கிறார்கள். காமராஜர், அண்ணா, ஜெயலலிதா, இந்திரா காந்தி ஆகியோரும் வெற்றிவாய்ப்பை இழந்து இருக்கிறார்கள்.

இதனால் தலைவர்களுடைய தலைமை பண்பு குறைந்துவிடாது. மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எங்களுடைய கொள்கை தான் நியாயமானது. எங்களுடைய சித்தாந்தம் தான் உண்மையானது. எனவே நிச்சயமாக வருங்காலத்தில் காங்கிரஸ் மகத்தான வளர்ச்சியை அடையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story