‘தேர்தல் தோல்வி சறுக்கல் தான், வீழ்ச்சி அல்ல’ - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி


‘தேர்தல் தோல்வி சறுக்கல் தான், வீழ்ச்சி அல்ல’ - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 6:52 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சறுக்கல் தான், வீழ்ச்சி அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்வாதிகாரம்

தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் ஏராளமான வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்து உள்ளனர். தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியானது. சந்தர்ப்பவாதம் கிடையாது. தென்னிந்தியாவில் வெற்றி பெற்று உள்ளோம். வட இந்தியாவில் தோல்வியடைந்து உள்ளோம். வருங்காலத்தில் அங்கும் கட்சியை வளர்த்து மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.

இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு மாநிலத்தில் வேறு கட்சி வெற்றி பெற்றால் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்றால் அது சர்வாதிகாரம். மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. தமிழகத்தை ஒதுக்கி விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டக்கூடாது. தமிழகத்தில் தாமரை நன்றாக மலரட்டும். ஆனால் தாமரை மலர தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் தாமரை மலருமா?.

சறுக்கல் தான், வீழ்ச்சி அல்ல

தோல்வியும், வெற்றியும் தற்காலிகமானது என்பதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லி இருக்கிறார். மக்களை நேசிக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை சொல்கிறோம். மொழி, சாதி, மதம் ஆகியவற்றை கொண்டு மக்களை பிரிக்கக்கூடாது என்று கூறுகிறோம். ஆனால் மோடி தனி மனித விமர்சனத்தை வைத்தார். காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் செல்கிறது. இது ஒரு சறுக்கல் தான். வீழ்ச்சி கிடையாது.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வழி நடத்த ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் இல்லை. தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி சொன்னாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொண்டர்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி. அதற்காக பேச்சுவார்த்தை எல்லாம் நடத்த மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story