கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம்; ராகுல் காந்தியிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்


கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம்; ராகுல் காந்தியிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 May 2019 9:46 AM GMT (Updated: 28 May 2019 9:46 AM GMT)

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25ந்தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனை கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கள் மகன்களுக்கு ‘சீட்’ கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகின. 

காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் ராகுல் காந்தி  தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  பிரியங்கா காந்தி இன்று ராகுல் காந்தி வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது ராஜினாமா முடிவை கைவிடுமாறும் அதேசமயம் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதியான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டு கொண்டதாக தெரிகிறது. பின்னர் சச்சின் பைலட், ரண்தீப் சுர்ஜேவாலா, வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி பெற்ற வெற்றிக்காக மு.க. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தொலைபேசி வழியே இன்று வாழ்த்து தெரிவித்தனர்.  தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமுடன் ராகுல் உள்ள நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  தேர்தலில் தோற்றிருக்கலாம்.  ஆனால் மக்களின் மனதை வென்றுள்ளோம் என அவரிடம் மு.க. ஸ்டாலின் கூறினார்.

Next Story