அடிக்கடி தீக்குளித்துவிடுவதாக மிரட்டியதால் ஆத்திரம் பெண் உயிரோடு எரித்துக்கொலை கள்ளக்காதலன் கைது


அடிக்கடி தீக்குளித்துவிடுவதாக மிரட்டியதால் ஆத்திரம் பெண் உயிரோடு எரித்துக்கொலை கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 28 May 2019 11:00 PM GMT (Updated: 28 May 2019 10:12 PM GMT)

அடிக்கடி தீக்குளித்து விடுவதாக மிரட்டியதால் ஆத்திரத்தில் கள்ளக் காதலியை உயிருடன் எரித்துக்கொன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் தேவி(வயது 39). கணவரை இழந்த இவருக்கும், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த தங்கராஜ்(40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

கடந்த சில வருடங்களாக இருவரும் அதே பகுதியில் வாடகை வீட்டில் கணவன்-மனைவிபோல் வாழ்ந்து வந்தனர். தங்கராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தேவி, உடலில் தீப்பிடித்து எரிந்தநிலையில் வலி தாங்காமல் அலறி துடித்தபடி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தேவி உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தேவி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக உயிருக்கு போராடிய தேவியிடம் அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் கொரட்டூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் தேவி மரண வாக்குமூலம் அளித்தார். அதில் தங்கராஜ்தான் தன்னை உயிருடன் தீ வைத்து எரித்து விட்டதாக தேவி கூறி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த கொரட்டூர் போலீசார், சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் தங்கராஜை கைது விசாரித்தனர்.

கொலையான தேவியின் முதல் கணவர் சங்கர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குற்ற வழக்கில் தொடர்புடைய சங்கர், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது அவர் உயிரிழந்தார். 2 மகள்களுக்கும் திருமணமான நிலையில் தனியாக வசித்துவந்த தேவிக்கு, அதன்பிறகு தங்கராஜூடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் இருவரும் ஒரே வீட்டில் கணவன்-மனைவிபோல் வசித்து வந்தனர்.

தங்கராஜுக்கும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது குழந்தைகளுடன் அவருடைய மனைவி தனியாக பிரிந்து சென்று விட்டார்.

தங்கராஜ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அப்போது தேவி, தங்கராஜை மிரட்டுவதற்காக அடிக்கடி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து சாகப்போவதாக கூறிவந்தார்.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தங்கராஜிடம், தேவி இதேபோல் மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், “நீ என்ன தீக்குளித்து விடுவதாக மிரட்டுவது, நானே உன்னை உயிருடன் எரித்து விடுகிறேன்” என்று கூறி தேவியின் கையில் இருந்த மண்எண்ணெயை வாங்கி அவரது உடலில் ஊற்றி உயிருடன் எரித்துக்கொலை செய்தது தங்கராஜிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.

Next Story