குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்: அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர முதலமைச்சர் வேண்டுகோள்


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்: அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர முதலமைச்சர்  வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Jun 2019 7:20 AM GMT (Updated: 11 Jun 2019 8:10 AM GMT)

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குழந்தைப் பருவம் மனித வாழ்வின் பொற்காலம். பள்ளி சென்று கல்வி  பயிலவும், ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்ச்சியாக செல்ல வேண்டிய குழந்தைப் பருவத்தில் வேலைக்கு செல்வதென்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் ஊறுவிளைவிக்கக்கூடியது.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட, உலக குழந்தைத்  தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கல்வி என்னும் செல்லம் பெற்று வளர்ந்து செழித்து மிளிரவேண்டிய பருவத்தில், வேலைக்கு சென்று பளுவினைச் சுமக்கும் குழந்தைகளை, குழந்தைத் தொழிலாளர்  முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்வதே தமிழ்நாடு அரசின் அடிப்படை குறிக்கோளாகும்.

இக்குறிக்கோளை விரைவில் எட்டிடவும், வளமான மனித வளத்தினை  உருவாக்கவும், குழந்தைகளின்பால் மிகுந்த அன்பு கொண்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி  மையங்களில் கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பை, முட்டையுடன் கூடிய பல வகையான சத்தான மதிய உணவு, கல்வி உபகரணங்கள், மடிக்கணிணி, மிதிவண்டி, கட்டணமில்லாப் பேருந்து வசதி மற்றும் உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத்  தொழிலாளர்களுக்கு  மாதாந்திர ஊக்கத்தொகை என எண்ணற்ற உதவிகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே  முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை  முற்றிலுமாக தடை செய்து,  அதனை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் நாம் அனைவரும் குழந்தைகளின் உரிமைகளை மதித்திடுவோம்!

குழந்தைகளை, வேலைக்கு அனுப்ப மாட்டோம் எனப்பெற்றோர்களும், பணியில் அமர்த்தமாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதியேற்று தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றிட அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குழந்தைகளின் உழைப்பை அகற்றுவோம்! அவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றுவோம்!!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story