செயல்பாடுகள் எளிமை ஆக்கப்படுகின்றன : 25 லட்சம் வீட்டு மனைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை - உள்ளாட்சி அதிகாரிகள் தகவல்


செயல்பாடுகள் எளிமை ஆக்கப்படுகின்றன : 25 லட்சம் வீட்டு மனைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை - உள்ளாட்சி அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2019 11:04 PM GMT (Updated: 11 Jun 2019 11:04 PM GMT)

25 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகள் எளிமையாக்கப்படும் என்று உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

சொந்த வீடு கட்டுவது என்பது குடும்ப தலைவர்கள் ஒவ்வொருவரின் லட்சியம் என்றே சொல்லலாம். இதற்காக தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து பெரும்பாலானோர் வீட்டு மனைகளை வாங்குகிறார்கள். சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் வீட்டு மனைகளை ஒழுங்கு படுத்துவதற்கு அதன் உரிமையாளர்கள் முறையான ஆவணங்களை வழங்காததால் அரசிடம் இருந்து ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ரியல் எஸ்டேட் சார்பில் போடப்பட்டுள்ள மனை வடிவமைப்புகள் (லே-அவுட்) மற்றும் தனிநபர் வீட்டு மனைகளை ஒழுங்கு படுத்துவதற்கான திட்டத்தின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட உள்ளாட்சி துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சரியான ஆவணங்களோடு விண்ணப்பம் செய்யாததால் பெரும்பாலான மனைகளுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறினர். மேலும் மனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைகளை ஒழுங்குபடுத்தும் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 62 ஆயிரத்து 683 மனை வடிவமைப்புகள் மற்றும் 27 லட்சத்து 69 ஆயிரம் தனிநபர் வீட்டு மனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 29 ஆயிரம் தனிநபர் வீட்டு மனைகளுக்கு மட்டுமே அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை ஒழுங்குபடுத்துவதற்கு, உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு எடுத்துள்ளன.

இதுகுறித்து உள்ளாட்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:-

மனைகளை ஒழுங்கு படுத்தும் திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறுவதற்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர் வீட்டு மனை உரிமையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானோர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. எனவே மனைகளுக்கு ஒப்புதல் பெறும் நடைமுறைகளை எளிமைப் படுத்துவதன் மூலம் தனிநபர் வீட்டு மனை உரிமையாளர்களை ஊக்குவிப்பு செய்ய உள்ளோம்.

அதன்படி வீட்டு மனைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆவணங்களை பெறுமாறு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மனை உரிமையாளர்களுக்கு இ-மெயில் அனுப்பப்படும். எங்களுடைய பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்போம். இதன்மூலம் மனைகளை ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகள் எளிமைப் படுத்தப்படும். தனிநபர் வீட்டு மனை உரிமையாளர்கள் மனை பிரிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கு உதவி செய்ய எப்போதும் வாய்ப்பு காத்திருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் பெறுவதில் நிலவும் சிக்கல் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்ற சர்வேயர்கள் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.ஜே.பழனிராஜன் கூறும்போது,

“தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பொதுப்பணித்துறை மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் போன்ற துறைகளிடம் இருந்து தடை இல்லா சான்றிதழ் பெறுவதில் இடர்பாடு இருப்பதால் பெரும்பாலான தனிநபர் வீட்டு மனை உரிமையாளர்கள் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் உள்ளது” என்று கூறினார்.


Next Story