அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள்; உட்கட்சி விவகாரம் பற்றிய கேள்விக்கு தமிழிசை பதில்


அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள்; உட்கட்சி விவகாரம் பற்றிய கேள்விக்கு தமிழிசை பதில்
x
தினத்தந்தி 12 Jun 2019 6:16 AM GMT (Updated: 12 Jun 2019 6:16 AM GMT)

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் அக்கட்சியை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும்.  அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை.

ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும்.  2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும்  நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.  இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும்.  பொதுக்குழுவை கூட்டுவது பற்றியும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்கு பதிலளித்த அவர், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தேர்தலுக்காக மட்டுமே ஏற்பட்டது.  அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சி பதிலளிக்க கூடாது.

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் அக்கட்சியை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள் என்று கூறியுள்ளார்.

Next Story