திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 வது நாளாக நடக்கும் தற்கொலை சம்பவங்கள்..


திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 வது நாளாக நடக்கும் தற்கொலை சம்பவங்கள்..
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 AM GMT (Updated: 12 Jun 2019 10:00 AM GMT)

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகளில் கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து நடந்த தற்கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் 175 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைப்பதால் வேலை தேடி வருவோர், தொழில் நிமித்தமாக சென்னை வருவோர் திருவல்லிக்கேணி பகுதிக்கு வருவது வழக்கம். 

இந்த நிலையில் நேற்று இரவு தாசுதி கான் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் தூத்துக்குடியை சேர்ந்த மரிய பிரான்சிஸ் பிரபு என்பவர் உயிரிழந்து கிடந்தார். நேர்முகத் தேர்வுக்கு வந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன் விடுதியில் தங்கியிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த 4 பேர் கடன் பிரச்சினையால் தற்கொலைக்கு முயன்றதில் ஒருவர் உயிரிழந்தார். இதே போல் நேற்று முன்தினம் காதல் ஜோடி ஒன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காஜல் என்ற பெண் உயிரிழந்தார். 

தொடர்ந்து 3 வது நாளாக மீண்டும் திருவல்லிக்கேணி தங்கும் விடுதியில் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. விடுதிகளில் தங்குவோர் குறித்த முழுவிபரங்களையும் கேட்ட பிறகே அறை தருவதாகவும், குடும்ப பிரச்சினையால் இதுபோன்ற தற்கொலைகள் நடப்பதாகவும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story