‘ஹெல்மெட்’ அபராத தொகையை உயர்த்தும் அரசாணை : ஒரு வாரத்தில் அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு


‘ஹெல்மெட்’ அபராத தொகையை உயர்த்தும் அரசாணை : ஒரு வாரத்தில் அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:51 PM GMT (Updated: 12 Jun 2019 11:51 PM GMT)

‘ஹெல்மெட்’ அபராத தொகையை உயர்த்துவது தொடர்பான அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவில், “மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும். மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். இந்த சட்ட விதிகளை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜரானார்.

அவர் தன் வாதத்தில், “மோட்டார் வாகன சட்ட விதிமீறல் குறித்து புகார் அளிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் 96 புகார்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்புக்காக 2000-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ரூ.605.55 கோடி செலவிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 2018-ம் ஆண்டு ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர்கள் மீது 14 லட்சத்து 6 ஆயிரத்து 491 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘சீட் பெல்ட்’ அணியாததற்காக 39 லட்சத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உடனடி அபராதம் வசூலிக்க எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு போலீசாருக்கு போதிய பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த 2 வார அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை 21-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பின்னர் நீதிபதிகள், “மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருக்கு மட்டும் உள்ளது. இந்த அதிகாரத்தை சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும். மோட்டார் வாகன விதிமீறல் தொடர்பான குற்றத்துக்கு விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்த 2011-ம் ஆண்டே போக்குவரத்து ஆணையர் அரசாணை பிறப்பித்துள்ளார். எனவே, ‘ஹெல்மெட்’ அணியாதவர்கள், மோட்டார் வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story