தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை : மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை : மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 13 Jun 2019 12:02 AM GMT (Updated: 13 Jun 2019 12:02 AM GMT)

தி.மு.க. எதிர்ப்பால் தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

கோவை, 

தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி.க்களின் உருவப் படங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்தியாவின் பிரதமராக மோடி 2-வது முறையாக பொறுப்பேற்றபின், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். கடந்த கால தமிழக வரலாறு மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அவர்கள் உணர்ந்து பார்க்க தவறிவிட்டனர்.

மும்மொழி திட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்ததை பார்த்தோம். அதனால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு ஊக்குவிக்காதீர்கள் என்று சொன்னேன்.

திருமணமான மூன்றே நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு 17-வது சட்டப்பிரிவை எரித்து கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் ராமநாதன். தமிழகத்தின் நலனுக்காக 27 முறை சிறை சென்ற செம்மல் அவர்.

க.ரா.சுப்பையன் எம்.பி.யாக இருந்தபோது அவரது தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தியவர். கிராமப்புறங்களில் கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பல சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தார்.

மும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் இதை பார்க்க கலைஞரும் இல்லை, அண்ணன் ராமநாதனும், க.ரா.சுப்பையனும் இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Next Story