தமிழகத்தில் தமிழில் பேச தடையா? தெற்கு ரெயில்வேக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


தமிழகத்தில் தமிழில் பேச தடையா?  தெற்கு ரெயில்வேக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2019 10:52 PM GMT (Updated: 14 Jun 2019 10:52 PM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சென்னை, 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில்வே கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் நிலைய அலுவலர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது என்று தமிழகத்திலேயே தமிழில் பேசத் தடை விதித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஆணவமாகவும், அடாவடித்தனமாகவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தமிழ் பேசக்கூடாது, இந்தி பேசு என்பது மொழித்திணிப்பு மட்டுமல்ல மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு. மேலும் மேலும் தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடி வருகிறார்கள், சீண்டிப் பார்க்கிறார்கள். இதுபோன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story