ரெயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கை ரத்து : தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கையை ஏற்று நடவடிக்கை


ரெயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கை ரத்து :  தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2019 11:45 PM GMT (Updated: 14 Jun 2019 11:45 PM GMT)

கட்டுப்பாட்டு அறையுடன் ரெயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையொட்டி பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட இயக்கத்துறை மேலாளர் சிவா, சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நிலைய அதிகாரிகள் மற்றும் பிரிவு கட்டுப்பாட்டாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை பிறப்பித்தார்.

அதில் கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் இடையே ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும், தமிழ் மொழியில் ரெயில் நிலைய அதிகாரிகள் பேசுவதை தொடர வேண்டும் என்றும் கோரி தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினை தி.மு.க. எம்.பி., தயாநிதி மாறன் நேற்று சந்தித்து மனு கொடுத்தார்.

அப்போது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அவர்களுடன் ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தயாநிதி மாறன் எம்.பி.யின் கோரிக்கை மனுவை பெற்ற தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின், அவரிடம் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள உத்தரவு உடனே ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த மே 17-ந்தேதி ஆங்கிலம், இந்தி மட்டுமே பேச வேண்டும் என தலைமை போக்குவரத்து திட்ட மேலாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். தற்போது ஒவ்வொரு கோட்டத்துக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மறைமுகமாக இந்தி திணிக்க முயற்சி நடக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொது மேலாளரை சந்தித்து ஒரு நல்ல முடிவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்காதீர்கள்; மீண்டும் பழைய முறையை அமலுக்கு கொண்டு வாருங்கள் என மனு அளித்து வலியுறுத்தினோம். இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆங்கிலம், இந்தி மட்டும் பேசவேண்டும் என்ற அந்த சுற்றறிக்கையை ரத்து செய்கிறோம் என உறுதி அளித்தார். மேலும் மீண்டும் பழைய முறைப்படி பிராந்திய மொழி பயன்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைப்போன்று தெற்கு ரெயில்வே தலைமை இயக்கத்துறை மேலாளர் அனந்தராமனை தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) பொது செயலாளர் கண்ணையா சந்தித்து கோரிக்கை மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கையை ஏற்று, ரெயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது, இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரெயில்வே நிர்வாகம் ரத்துசெய்து விட்டது.

Next Story