24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்


24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
x
தினத்தந்தி 17 Jun 2019 10:50 AM GMT (Updated: 17 Jun 2019 10:50 AM GMT)

குரூர் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறான விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1 தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் 24 தவறான கேள்விகள் கேட்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு பணியாளர் தேர்வாணையத்தின் துணை செயலாளர் தாரா பாய் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

‘மாதிரி விடைத்தாளில் இருந்த 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் அளித்துள்ளதாக 4,390 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு மனு அளித்தனர். இவற்றை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாதிரி விடைத்தாளில் 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன. 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது.

7 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே மனுதாரர் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது.

இது போன்ற அரசு பணியாளர்கள் தேர்வின் மதிப்பெண்களை எந்திரத்தனமாக வெளியிட கூடாது என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story