தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை; அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை; அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 17 Jun 2019 1:02 PM GMT (Updated: 17 Jun 2019 1:02 PM GMT)

தமிழகத்தில் மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முகமது ஷாகித் (வயது 77) என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  ஆனால் கடந்த 10ந்தேதி அவர் உயிரிழந்து விட்டார்.

இதனால் ஆத்திரமுற்ற அவரது உறவினர்கள், மருத்துவர்களின் கவன குறைவே இதற்கு காரணம் என கூறி தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதில், 2 மருத்துவர்கள் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் தீர்வு காண முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.  போராட்டத்தினை விட்டு விட்டு பணிக்கு திரும்பும்படி அரசு கூறியது.

ஆனால் இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது.  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்  மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை அடுத்து மேற்கு வங்காளத்தில் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில், சில இடங்களில் அவர்கள் பேரணியாகவும் சென்று தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

எனினும், தமிழகத்தில் மருத்துவர்களின்  போராட்டத்தால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவித பாதிப்பும் இல்லை.  அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Next Story