நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை கே.என்.நேருவுக்கு, கராத்தே தியாகராஜன் பதில்


நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை  கே.என்.நேருவுக்கு,  கராத்தே தியாகராஜன் பதில்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:05 PM GMT (Updated: 22 Jun 2019 11:05 PM GMT)

நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்று கே.என்.நேருவுக்கு கராத்தே தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் எத்தனை காலம் பல்லக்கு தூக்குவது என்றும், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்றும் பேசி இருந்தார். கே.என்.நேருவின் இந்த பேச்சுக்கு, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கே.என்.நேரு முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர். ஆனால் எந்த கருத்தானாலும் அதை இறுதி செய்வது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி தான் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் கடந்த முறை சென்னை மாநகராட்சியில் 200 சீட்டுக்கு 14 கொடுத்தனர். கூட்டணி தர்மத்துக்காக தலைமைக்கு கட்டுப்பட்டு அதை ஏற்றுக்கொண்டோம். ஒவ்வொரு கட்சியும் தனித்து நிற்கத்தான் ஆசைப்படுவார்கள்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தொண்டர்களின் தேர்தல். தனது கட்சியின் கருத்தை கே.என்.நேரு கூறியுள்ளார். அவர் மூத்த தலைவர் என்பதால் சொல்வதற்கு உரிமை உள்ளது. காங்கிரஸ் செயற்குழுவில் எங்களின் கருத்தை சொன்னோம். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க. தலைவரிடம் பேசி என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

தேர்தல் முடிந்தவுடன் இதுபோன்ற மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். தலைவர்கள் கூடிப்பேசி இதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எல்லா கட்சிகளுக்கும் வாக்குவங்கி உள்ளது. காங்கிரசை பொறுத்த வரை இந்தியா முழுவதும் வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு சில தொகுதிகளில் எங்களுக்கு வாக்கு வங்கி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல இடங்களில் வாக்கு வங்கி உள்ளது.

சட்டசபையில் தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் விரைவில் வர இருக்கிறது. இந்த தீர்மானத்தை தீர்மானிக்கும் முக்கிய ஓட்டுகளாக காங்கிரஸ் கட்சியின் 7 ஓட்டுகள் இருக்கின்றன. தி.மு.க. கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ் கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிப்பார்கள். இது கே.என்.நேருவுக்கு தெரியாதா?

தி.மு.க.வும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து தான் இப்போது மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. காங்கிரசும் பல தோல்விகளை சந்தித்து தான் தமிழகத்தில் இப்போது வெற்றி பெற்று இருக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பல்லக்கு நாங்கள் யாரையும் தூக்க சொல்லவில்லை. சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story