1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி


1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி
x
தினத்தந்தி 25 Jun 2019 11:45 PM GMT (Updated: 25 Jun 2019 9:49 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 19). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தாடு அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் உள்ள அவர், அவ்வப்போது பெற்றோருக்கு உதவியாக விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான வயலில் ஆழ்குழாய் பாசனம் மூலம் நெற்பயிர் நாற்று நட்டிருந்தனர். அந்த பயிர்களை நடவு செய்வதற்காக தொழிலாளர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தனி ஆளாக நடவு பணியை மேற்கொள்வது என முடிவு செய்தார். இதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களில் 1 ஏக்கர் நிலத்திலும் தானே நெற்பயிர்களை நடவு செய்தார். கல்லூரி மாணவியின் இச் செயலை கண்டு அக்கம் பக்கம் இருந்த விவசாய தொழிலாளர்கள் அவருக்கு உதவ முன்வந்தபோதும், அன்புடன் அதை தவிர்த்தார். மாணவியின் இந்த முயற்சியை அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள் வெகுவாக பாராட்டினர்.

விவசாயம் குறித்தும், விவசாயிகள் படும் இன்னல்கள் குறித்தும், பரவலாக பேசப்படும் இச்சூழலில் விவசாயம் குறித்து ஆர்வமும், விழிப்புணர்வும் ஏற்படும் வகையில், தனி ஆளாக நடவு செய்த கல்லூரி மாணவிக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story