சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்வு


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்வு
x
தினத்தந்தி 6 July 2019 2:07 AM GMT (Updated: 6 July 2019 2:07 AM GMT)

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை,

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கடந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில், இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது ஆறுதலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று நாளாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இதன்படி, லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை ரூ.73.19க்கும், டீசல் விலை ரூ.67.96க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் 2019ஐ தாக்கல் செய்தார்.  இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியானது.  இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்து உள்ளது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டு புதிய சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்ட நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது.

Next Story