சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 7 July 2019 11:04 PM GMT (Updated: 7 July 2019 11:04 PM GMT)

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

கேரள மாநிலத்தில் பருவ மழை தீவிரமடையவில்லை. பருவ மழை தீவிரமடைந்த உடன் தான் தமிழகத்தில் வெப்ப நிலை முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் சோலையாறு, ஊட்டி, மேல் பவானி ஆகிய பகுதிகளில் 3 சென்டி மீட்டரும், நடுவட்டம், தேவாலா, வால்பாறை ஆகிய பகுதிகளில் 2 சென்டி மீட்டரும், குந்தாவில் 1 சென்டி மீட்டர் அளவிலும் மழை பதிவானது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story