காரில் கொண்டு சென்ற 3 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிரடி நடவடிக்கை


காரில் கொண்டு சென்ற 3 கிலோ தங்கம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 12 July 2019 10:15 PM GMT (Updated: 12 July 2019 8:05 PM GMT)

வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் கொண்டு சென்ற 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி வாணியம்பாடியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 3 குழுக்கள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 கிலோ தங்கம் பறிமுதல்

இந்த நிலையில் வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் வாணியம்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி தலைமையில் பறக்கும்படை அதிகாரி முருகதாஸ் மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 கிலோ தங்கம் கட்டிகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் நகைகடைகளுக்கு நகைகள் செய்துகொடுப்பதற்காக தங்கத்தை கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. அதைத்தொடர்ந்து 3 கிலோ தங்ககட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் ஆகும்.

Next Story