கடற்கரையில் போலீஸ் சீருடையில் பெண் போலீசார் குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலானது


கடற்கரையில் போலீஸ் சீருடையில் பெண் போலீசார் குத்தாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலானது
x
தினத்தந்தி 12 July 2019 9:30 PM GMT (Updated: 12 July 2019 8:14 PM GMT)

கடற்கரையில் போலீஸ் சீருடையில் பெண் போலீசார் குத்தாட்டம் போட்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சென்னை, 

இளம் சமுதாயத்தினரை சீர்குலைக்கும் எத்தனையோ ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டாலும், சத்தமே இல்லாமல் சென்சார் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட ஆபாசத்தின் அரங்கமாகவே உருவெடுத்து விட்டது, ‘டிக்-டாக்’ எனும் செல்போன் செயலி. குறுகிய நேரத்தில் ஒருவரது தனித்திறமையை வெளிப்படுத்தும் மேடையாகவே பார்க்கப்பட்ட இந்த ‘டிக்-டாக்’ செயலி, இப்போது ஆபாசத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது.

‘நளினம்’ என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி தலைதூக்கியது. காதலரை நினைத்து உருகி பாடுவது, அதே காதலருடன் ‘டூயட்’ பாடி முத்த மழையில் நனைவது, அந்தரங்க பேச்சுகளையும் தடாலடியாக போட்டு உடைப்பது, முகம் தெரியாத நபருடனே மோகத்தில் வழிவது என கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாமல் ‘டிக்-டாக்’ செயலி விசுவரூபம் எடுத்து வருகிறது.

தடை நீக்கம்

இந்த செயலியால் இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து ‘டிக்-டாக்’ செயலிக்கு கோர்ட்டு தடை விதித்தது. இது ‘டிக்-டாக்’ பிரியர்களை வெகுவாக பாதித்தது. ஆனாலும் சிறிது நாட்களிலேயே சில நிபந்தனைகளுடன் ‘டிக்-டாக்’ செயலி மீதான தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் விசுவரூபம் எடுக்க தொடங்கியுள்ளது, ‘டிக்-டாக்’ செயலி. இந்த செயலிக்கு அடிமையாகி மாணவிகள், இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பெண் போலீசார் குத்தாட்டம்

ஆனால் போலீசாரையே இந்த ‘டிக்-டாக்’ செயலி மோகம் கொள்ள செய்துள்ளது. கடற்கரையில் துள்ளி வரும் அலையில் இரு இளம் பெண் போலீசார், உற்சாகமாக நடனமாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘சூர்யவம்சம்’ படத்தில் வரும் ‘சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு’ என்ற பாடல் வரிகள் ஓட, பின்னணியில் கடற்கரையில் நடன கலைஞர்களுக்கு சவால் விடும் வகையில் நளினமாக போலீஸ் சீருடையில் குத்தாட்டம் போட்டுள்ளனர் பெண் போலீசார்.

பெண் போலீசாரின் ஆட்டத்தில் ஆபாசம் இல்லை என்றாலும், சீருடை அணிந்தபடி அவர்கள் ஆடியிருப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது எந்த கடற்கரை என்பதும், இது ஆடியிருப்பது எந்த மாவட்ட போலீசார் என்பதும் தெரியவில்லை.

சமீபத்தில் போலீஸ் சீருடையில் ஆணும், பெண்ணும் ஆடி பாடுவது போன்ற வீடியோ வெளியானது. விசாரணையில், அவர்கள் நாடக நடிகர்கள் என்பது தெரியவந்தது. எனவே இந்த வீடியோவில் ஆடியிருப்பது யார்? என்பது விசாரணையில் தெரியவரும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story