தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது; மத்திய அரசின் சுற்றறிக்கை - மு.க.ஸ்டாலின் கண்டனம்
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மத்திய அரசு பணியில் சேர விடாமல் தடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, தேர்வு முறைகளை மாற்றி மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே குழப்பம் செய்கிறது.
இந்தி பேசாத மாநில மக்களும் இந்திய அரசின் பணியிடங்களில் அமர தகுதியானவர்கள் என்ற உரிமையை பா.ஜ.க. அரசு மறந்து விடக்கூடாது.
கடந்த ஆண்டு தமிழில் நடைபெற்ற தபால்துறை தேர்வில், பீகார் உள்ளிட்ட வடமாநில மாணவர்கள் வெற்றி பெற்று வரலாறு காணாத முறைகேடு நடைபெற்றது. அதுகுறித்து இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல், தமிழில் தேர்வு எழுதுவது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற்று, அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story