சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு: அரசு நடத்திய பயிற்சி மையத்தில் படித்த 26 பேர் வெற்றி


சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு: அரசு நடத்திய பயிற்சி மையத்தில் படித்த 26 பேர் வெற்றி
x
தினத்தந்தி 13 July 2019 9:15 PM GMT (Updated: 13 July 2019 7:12 PM GMT)

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் அரசு நடத்திய பயிற்சி மையத்தில் படித்த 26 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

சென்னை, 

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் அரசு நடத்திய பயிற்சி மையத்தில் படித்த 26 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். முதன்மை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பயிற்சி மையம்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் புதிய வளாகம், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வகுப்பறைகள், தங்கும் வசதி, உணவு விடுதி, நூலகம் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறது. மாணவர்கள் கட்டணம் ஏதுமின்றி தங்கி படிக்கவும், உணவு அருந்தவும், தரமான பயிற்சியாளர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

26 பேர் வெற்றி

அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியாகின. இதில் அரசின் பயிற்சி மையத்தில் முழுநேரமாக தங்கி படித்த 232 பேரில் 23 பேரும், பகுதி நேரமாக பயிற்சி பெற்ற 62 பேரில் 3 பேரும் என மொத்தம் 26 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் முதன்மை தேர்வு எழுத தகுதிபெற்று இருக்கிறார்கள்.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று இந்த பயிற்சி மையத்தில் சேர விரும்புபவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். 225 பேர் தங்கி படிக்க, உண்டு மற்றும் உறைவிட வசதிகள் இந்த பயிற்சி மையத்தில் இருக்கின்றன. இந்த மையத்தின் மூலம் பயிற்சி பெற்று தேர்வு எழுதுபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story