அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்வது வாடிக்கையாக உள்ளது ஐகோர்ட்டு நீதிபதி வருத்தம்


அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்வது வாடிக்கையாக உள்ளது ஐகோர்ட்டு நீதிபதி வருத்தம்
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 7:35 PM GMT)

அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் எதிர்த்து வழக்கு தொடர்வதை ஆசிரியர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று ஐகோர்ட்டு நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 52 ஆயிரத்து 933 குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்த, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள 5 ஆயிரத்து 934 இடைநிலை ஆசிரியர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பள்ளிகளில் உள்ள 1,979 ஆசிரியர்களையும் நியமித்து தமிழக கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை ஏற்கனவே ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆசிரியர்கள் வழக்கு

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர், அதே பள்ளியில் அமைந்துள்ள அங்கன்வாடி மழலையர் பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று அந்த ஆசிரியர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளடர், ‘தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்களை மாற்றம் செய்து நியமிக்க காலஅவகாசம் ஆகும் என்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக அதிகாரிகள் நியமித்துள்ளனர். மழலையர் வகுப்பு எடுக்க நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதங்கள் உள்ளிட்ட மற்ற பயன்களில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறினார்.

கவுரவ குறைச்சலா?

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மழலையர் பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அங்கு பணியாற்ற வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளை படிக்க வைக்க முடியாத ஏழைகளுக்கு தமிழக அரசு இந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை தொடங்கியுள்ளது.

இடைநிலை ஆசிரியராக பணியாற்றிவிட்டு, இந்த மழலையர் பள்ளிகளில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலாக நினைக்கின்றனரா?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ‘அண்மை காலங்களில் ஆசிரியர்கள் எதற்கு எடுத்தாலும் வழக்கு தொடர்கின்றனர். இடமாறுதல் தொடங்கி அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்’ என்று வருத்தம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, ‘மழலையர் பள்ளிகளுக்கு நியமிக்கப்படவுள்ள உபரி ஆசிரியர்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story