சென்னை, கோவையில் போர் விமான பராமரிப்பு பயிற்சி மத்திய மந்திரி மகேந்திரநாத் பாண்டே தகவல்


சென்னை, கோவையில் போர் விமான பராமரிப்பு பயிற்சி மத்திய மந்திரி மகேந்திரநாத் பாண்டே தகவல்
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 7:47 PM GMT)

சென்னை, கோவையில் ரபேல் போர் விமானங்களின் பராமரிப்புக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி மகேந்திரநாத் பாண்டே கூறினார்.

சென்னை, 

தொழில்நுட்ப கல்வி பாடத்திட்டங்களை தயாரித்துக் கொடுக்கும், தேசிய தொழில் பயிற்சி ஊடக தயாரிப்பு நிலையத்தின் (என்.ஐ.எம்.ஐ.) ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தேசிய உயர்நிலை பயிற்சி நிலையத்தில் (என்.எஸ்.டி.ஐ.) நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் மந்திரி மகேந்திரநாத் பாண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப பாடத்திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. பொதுவாக இதுபோன்ற விழாக்கள் டெல்லியில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் என்.ஐ.எம்.ஐ.யின் தலைமையிடம் சென்னையில் இருப்பதால் இங்குதான் விழாவை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அதன்படி இந்த விழா சென்னையில் நடந்தது.

அமித் ஷா தொடங்குகிறார்

உலக இளைஞர்கள் திறன் மேம்பாட்டுத்தினம் நாளை (15-ந் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. அதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 3 முக்கிய அம்சங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

தற்போது டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் அந்த விமானம் சம்பந்தப்பட்ட உதிரிபாகங்கள், பாரமரிப்பு, பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்கான பயிற்சி (ஏரோ என்ஜினீயரிங்) நாட்டிலேயே முதல் முறையாக மராட்டிய மாநிலம் நாக்பூரில் அரசு ஐ.டி.ஐ. கல்வி நிறுவனத்தில் தொடங்கப்படுகிறது. ஏரோ பிட்டர் போன்ற பல்வகை பயிற்சிகள் அங்கு அளிக்கப்படும்.

அதுபோன்ற பயிற்சி சென்னை (என்.எஸ்.டி.ஐ.) மற்றும் கோவையில் (அரசு ஐ.டி.ஐ.யிலும்) விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி அமித் ஷா வெளியிடுவார். இது பொறியியலுக்கு அடுத்தபடியாக வரும் தொழில்நுட்பப் பயிற்சியாக இருக்கும்.

உள்நாட்டில் திறன் மேம்பாடு

இந்த பயிற்சி, போர் விமான பழுதுபார்ப்பு பணித்திறனை உள்நாட்டிலேயே மேம்படுத்துவதற்கான திட்டமாக அமையும். இங்கு பயிற்சி எடுப்பவர்கள், நாடு முழுவதும் சென்று மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இது பயிற்றுனர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியாகும்.

அன்று, ‘ஸ்மார்ட் அக்ரிகல்சர்’ என்ற தொழில்நுட்பம், சிக்கனம் ரீதியான வேளாண்மை தொடங்கி வைக்கப்படும். அதோடு இந்திய தபால் வங்கி சேவை தொடர்பான பயிற்சி திட்டத்தையும் மத்திய மந்திரி அமித் ஷா தொடங்கி வைப்பார்.

சேவை வேலைவாய்ப்பு

இதுவரை உற்பத்தித் துறைக்கு அரசு முன்னுரிமை அளித்து வந்தது. இனி சேவைத்தொழில் பிரிவிலும் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க அரசு முன்வந்துள்ளது. அதிலும் இளைஞர்களுக்கு பயிற்சி தர திட்டமிட்டு இருக்கிறோம்.

பி.காம், பி.பி.ஏ. ஆகிய கல்விகளுக்கு வேலைவாய்ப்பு சற்று குறைவாக உள்ளது. எனவே நாடு முழுவதும் 21 கல்வி நிறுவனங்களில் பி.காம், பி.பி.ஏ. ஆகிய கல்வியுடன் தளவாட மேலாண்மை கல்வியையும் (லாஜிஸ்டிக்ஸ், அப்ளைட் லாஜிஸ்டிக்ஸ்) சேர்க்க முடிவு செய்துள்ளோம். இந்த கல்வியை 50 சதவீதம் வகுப்பறைகளிலும், மீதமுள்ள கல்வியை தொழில் நிறுவனங்களிலும் மாணவர்கள் படிப்பார்கள். இதனால் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுவிடும்.

ரஷியாவில் போட்டி

பி.எம்.கே.வி.ஒய். என்ற இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டத்தின்படி பயிற்சி அளிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவர்களுக்கு திறனுக்கேற்ற வேலை கிடைத்துள்ளதா என்பதை 6 மாத அளவுக்கு கண்காணித்து வருவோம். இந்த கால கட்டத்தை மேலும் நீட்டிக்கவும் யோசனை செய்து வருகிறோம்.

இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற 45 பேர் ரஷியாவில் ஹசன் என்ற இடத்தில் நடக்கும் உலக திறன் போட்டியில் பங்கேற்கச் செல்கின்றனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த தஸ்லீம் முகைதீன் (சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு பிரிவு), கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன் (பிளாஸ்டிக் டை என்ஜினீயரிங் பிரிவு) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story