நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் தொடங்கியது


நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 14 July 2019 3:29 AM GMT (Updated: 14 July 2019 3:29 AM GMT)

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது.

நெல்லை,

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா ஒவ்வோராண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 8ம் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா வருதல் நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சி, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா வருதல் நடந்தது.

இந்நிலையில், நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்துள்ளனர்.  நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுதவிர 4 ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Next Story