நவீன சுகாதார வசதிகள் கிராமப்புறங்களுக்கு சென்றடைய அரசின் முயற்சிகளுக்கு தனியார் பங்களிப்பு அவசியம் சென்னையில் மருத்துவமனையை திறந்து வைத்து வெங்கையா நாயுடு பேச்சு


நவீன சுகாதார வசதிகள் கிராமப்புறங்களுக்கு சென்றடைய அரசின் முயற்சிகளுக்கு தனியார் பங்களிப்பு அவசியம் சென்னையில் மருத்துவமனையை திறந்து வைத்து வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 14 July 2019 9:45 PM GMT (Updated: 14 July 2019 7:49 PM GMT)

நவீன சுகாதார வசதிகள் கிராமப்புறங்களுக்கு சென்றடைய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தனியார் பங்களிப்பும் அவசியம் என்று சென்னையில் மருத்துவமனையை திறந்து வைத்து வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை, 

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘எம்.ஜி.எம். ஹெல்த்கேர்’ என்ற பன்னோக்கு மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. 400 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையின் திறப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

உலக தரத்திலான சிகிச்சை

‘எம்.ஜி.எம். ஹெல்த்கேர்’ பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைத்து, வெங்கையா நாயுடு பேசியதாவது:-

நாட்டில் ஆட்சி பொறுப்புக்கு வரும் அனைத்து அரசுகளும் சுகாதாரம், மக்கள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகின்றன. இதனால் இந்தியர்களின் சராசரி வாழ்நாள் 69 ஆண்டாக உயர்ந்திருக்கிறது. நகரப்பகுதிகளில் கிடைக்கும் மருத்துவ வசதிகள், கிராமப்பகுதிகளை இன்னும் சென்றடையவில்லை. இந்த குறைபாட்டை களைய தனியார் துறையினர் கிராமப்பகுதிகளிலும், தொலைதூரப்பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

நவீன சுகாதார வசதிகள் கிராமப்புறங்களுக்கு சென்றடைய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் தனியார் பங்களிப்பும் அவசியம். தற்போதைய நிலையில் நாட்டில் 6 லட்சம் டாக்டர்கள் மற்றும் 20 லட்சம் நர்சுகள் தேவைப்படுகிறார்கள். தரமான மருத்துவ சிகிச்சைகள் குறைவான கட்டணத்தில் கிடைக்க தனியார் துறையினர் அரசுடன் ஒத்துழைக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் உலக தரத்திலான சிகிச்சை கிடைக்கச்செய்வதன் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டமுடியும்.

ஆரோக்கியமே சொத்து

‘ஆரோக்கியமான மாநிலங்கள்-முன்னேறும் இந்தியா’ என்ற தலைப்பில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2009-ம் ஆண்டுக்கான சுகாதார குறியீடுகளின்படி தென் மாநிலங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தரமான டாக்டர்கள் மற்றும் குறைவான செலவு காரணமாக மருத்துவ சுற்றுலாவில் வளர்ந்த நாடுகளை விட இந்தியா வெற்றிகரமான நாடாக திகழ்கிறது.

அதிக அளவிலான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சென்னைக்கு மருத்துவ சுற்றுலாவாக வருவது இந்தியா இந்த துறையில் வேகமாக முன்னேறி வருவதையே காட்டுகிறது. ‘தங்கம்-வெள்ளி சொத்துகள் அல்ல. ஆரோக்கியமே உண்மையான சொத்து’ என்ற மகாத்மா காந்தியின் கருத்து தனிநபர்களுக்கு மட்டுமின்றி, இந்த சமுதாயத்துக்கும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அற்புத கலை

கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ அறிவியலில் நமது நாடு பழங்காலத்தில் இருந்தே சிறந்து விளங்குகிறது. நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முக்கிய மையமாக விளங்குகிறது. பொது சுகாதார சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமும் இதுதான். ஆசியாவிலேயே மிகவும் பழமையான பொது மருத்துவமனை மற்றும் கண் மருத்துவமனை தமிழகத்தில் தான் இருக்கிறது என்றார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, நோய்களை கண்டுபிடிப்பதையும், அவற்றை குணப்படுத்துவதையும், அந்த நோய் மீண்டும் வராமல் தடுப்பதையும் கடமையாக கொண்டு அதற்கு துணையாக அறிவியலை கொண்டு ஆரோக்கிய வாழ்வை நமக்கு அளிக்கும் அற்புத கலை மருத்துவம் ஆகும். இந்த கலையில் வல்லுனர்களாக திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றார்.

விழாவில், ‘எம்.ஜி.எம். ஹெல்த்கேர்’ தலைவர் எம்.கே.ராஜகோபாலன், இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன், தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் ராகுல் மேனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story