வசூல் பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் திருநங்கை கல்லால் அடித்துக் கொலை 3 திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை


வசூல் பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் திருநங்கை கல்லால் அடித்துக் கொலை 3 திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 July 2019 8:00 PM GMT (Updated: 17 July 2019 8:00 PM GMT)

விழுப்புரத்தில் திருநங்கை கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். வசூல் பணத்தை பங்கு பிரிக்கும் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று 3 திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் புறவழிச்சாலையில் இருந்து அயினம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த திருநங்கையின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரை யாரோ கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

3 பேரிடம் விசாரணை

இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த திருநங்கை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரமங்கலத்தை சேர்ந்த அன்பு என்கிற அபிராமி(வயது 36) என்பதும், விழுப்புரம் அய்யங்கோவில் திட்டு பகுதியில் உள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து அவர் வசித்து வந்ததும், நேற்று முன்தினம் சக திருநங்கைகளுடன் பொதுமக்களிடம் பணம் வசூலிக்க வெளியே சென்ற அபிராமி நேற்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது.

இதனால் அபிராமியுடன் பணம் வசூலிக்க சென்ற மற்ற திருநங்கைகள் 3 பேருக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அபிராமியுடன் சென்ற 3 திருநங்கைகளை போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story