வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு


வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 19 July 2019 9:26 AM GMT (Updated: 19 July 2019 9:26 AM GMT)

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுதாக்கல்  நேற்றுடன் முடிவடைந்தது. 

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இறுதிநாளில் 17 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. ரூ.11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. அதுபோல் வேறு கட்சியை சேர்ந்தவர் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் ஏ.சி. சண்முகத்தின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.

Next Story