தொழில்வளம் பெருக சாலை உள்கட்டமைப்பு அவசியம்; சேலத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
தொழில்வளம் பெருக சாலை உள்கட்டமைப்பு அவசியம் என சேலத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசினார்.
சேலம்,
சேலம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதேபோன்று கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால், தொளசம்பட்டி சாலையில் ரூ5.25 கோடியில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பாலங்களையும் அவர் திறந்து வைத்தார்.
அவர், புதிய பாலங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பின்னர், அந்த வழியே பேருந்து பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்பின் கூட்டத்தின் முன் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, எந்த மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதோ அங்கு தொழில்வளம் பெருகும்.
இதற்காக பொதுமக்கள் முன்வந்து நிலம் அளித்தால்தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
விவசாயிகளும் பங்கு பெற்று குடிமராமத்து பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி ஆலை அமைக்கப்படும். சென்னைக்கு அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
சாலை வசதி சிறப்பாக இருந்தால்தான் தொழில்துறை வளர்ச்சியடையும். அனைத்து வசதிகளையும் பெற வேண்டுமானால் உள்கட்டமைப்புகள் சிறந்ததாக இருக்க வேண்டும். அதனால், தொழில்வளம் பெருக சாலை உள்கட்டமைப்பு அவசியம் என அவர் பேசினார்.
Related Tags :
Next Story