அத்திவரதர் உற்சவம்; பக்தர்கள் வசதிக்கு கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு: தலைமை செயலாளர் பேட்டி


அத்திவரதர் உற்சவம்; பக்தர்கள் வசதிக்கு கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு:  தலைமை செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2019 7:50 AM GMT (Updated: 21 July 2019 7:50 AM GMT)

காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் சண்முகம் பேட்டியளித்து உள்ளார்.

காஞ்சீபுரம்,

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 48 நாட்கள் நடைபெறும் காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். மேலும் அத்திவரதருக்கு செண்பகப்பூ, மனோரஞ்சிதம் பூ மற்றும் மல்லிகை மலர்களால் மாலை அணிவித்து, நெய்வேத்தியம் செய்யப்பட்டது.  இதையடுத்து காலை 5 முதல் பக்தர்களின் தரிசனத்திற்கு பெருமாள் நடை திறக்கப்பட்டது. 

வார விடுமுறையான ஞாயிற்று கிழமையான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 2 மணியில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க வரும் முதியவர்கள், குழந்தை வைத்து உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் தனி வரிசையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

முன்னதாக நேற்று, கோவிலில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக, கோவிலில் 5 இணை ஆணையர்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினர். 

காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் சண்முகம் இன்று பேட்டியளித்து உள்ளார்.

அத்திவரதர் உற்சவத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அவர் கூறினார்.  இதேபோன்று காஞ்சீபுரத்தில் பேட்டியளித்த டி.ஜி.பி. திரிபாதி, விடுமுறை நாட்களில் என்.சி.சி. மாணவர்களை அனுப்பி வையுங்கள்.  அத்திவரதர் உற்சவத்திற்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Next Story