மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வேலூர் ஜெயிலில் இருந்து நளினி பரோலில் வந்தார்

மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வேலூர் ஜெயிலில் இருந்து ஒரு மாத கால பரோலில் நளினி வெளியே வந்தார்.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுகாலம் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முருகன்-நளினி தம்பதியினரின் ஒரே மகள் ஹரித்ரா. 27 வயது நிரம்பிய அவர் லண்டனில் எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். ஹரித்ராவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்கு 6 மாதம் பரோல் வழங்கும்படி நளினி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
மகளின் திருமண ஏற்பாட்டிற்காக...
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பாதுகாப்பு கருதி நளினிக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கியது. மேலும் நளினி தங்கும் வீட்டின் ஆவணம், ஜாமீன் உத்தரவாதம் ஆகியவை குறித்து 10 நாட்களுக்குள் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்யவும், அதுதொடர்பாக பரிசீலனை செய்து நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டில் ஒரு மாதம் தங்க உள்ளதாக நளினி தெரிவித்தார். நளினியின் தாயார் பத்மாவதி மற்றும் உறவினர் சத்யா 2 பேரும் ஜாமீன் உத்தரவாதத்துக்கான ஆவணங்களை அளித்தனர். இதையடுத்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகளும், மாவட்ட போலீசாரும் நளினி தங்க உள்ள வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தனர். நளினி தங்கும் வீடு குறித்த ஆவணங்களும் கடந்த 13-ந் தேதி சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் நளினி பரோலில் வருவது காலதாமதமானது.
ஒருமாதம் பரோல்
இந்த நிலையில் நேற்று காலை நளினி பரோலில் வருவதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை தரப்பில் நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி பெண்கள் ஜெயிலில் வளாகம் மற்றும் நுழைவுவாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலை 10 மணியளவில் பெண்கள் ஜெயிலில் இருந்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் நளினி ஒரு மாத கால பரோலில் வெளியே வந்தார். ஆரஞ்சு நிற பட்டுப்புடவை உடுத்தி புன்னகைத்தப்படி வந்த நளினியை அவரது வக்கீல் புகழேந்தி வரவேற்றார். தொடர்ந்து நளினியை, துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு வந்த நளினியை அவருடைய தாயார் பத்மாவதி ஆரத்தி எடுத்து வரவேற்றார். அவருடைய உறவினர்களும் கண்ணீர் மல்க நளினியை வரவேற்றனர்.
நளினியுடன் அவரது தாயார் பத்மாவதி, சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் தங்குகிறார்கள். நளினி தங்கும் வீட்டின் முன்பு மற்றும் அப்பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
நளினிக்கு 12 நிபந்தனைகள்
வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து ஒரு மாத பரோலில் வந்துள்ள நளினி தினமும் ஒருமுறை சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது. விழா மற்றும் கூட்டங்களில் பங்கேற்க கூடாது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் எந்தவொரு அமைப்புகளையும் சந்திக்க கூடாது. அதேபோன்று குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு நபர்களை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் கூடாது. போலீஸ் கண்காணிப்பின் கீழ் இருக்கவும், அவர்கள் பாதுகாப்பு நிமித்தமாக கூறும் அறிவுரைகளை ஏற்க வேண்டும் என்பது உள்பட 12 நிபந்தனைகள் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story