கல்லூரி முதல்வர்களுடன் இணை கமிஷனர் ஆலோசனை மோதலுக்கு காரணமான 90 மாணவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது


கல்லூரி முதல்வர்களுடன் இணை கமிஷனர் ஆலோசனை மோதலுக்கு காரணமான 90 மாணவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது
x
தினத்தந்தி 25 July 2019 11:30 PM GMT (Updated: 25 July 2019 8:44 PM GMT)

சென்னையில் மோதலுக்கு காரணமான 90 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி முதல்வர்களுடன் இணை கமிஷனர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில் மோதலுக்கு காரணமான 90 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி முதல்வர்களுடன் இணை கமிஷனர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆயுதம் ஏந்தினால் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.

மாணவர்கள் மோதல்

சென்னை அரும்பாக்கத்தில் நடுரோட்டில் கல்லூரி மாணவர்கள் குழுவினர், இன்னொரு குழுவினர் மீது பட்டாக்கத்தியால் வெட்டி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மோதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை

அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர்கள் அவர்களது பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று முதல்வர்களை சந்தித்து பேசினார்கள். சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழி செல்வன், மாநில கல்லூரி முதல்வர் ராவணன், நியூ கல்லூரி முதல்வர் அப்துல் ஜப்பார் ஆகியோரை நேற்று தனது அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் மாணவர்களிடையே மோதலை தடுப்பதற்காக அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

90 மாணவர்கள்

சென்னையில் 17 ரூட்டுகளில் மாநகர பஸ்கள் மூலம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். ஒவ்வொரு பஸ்சிலும் மாணவர்கள் பல குழுக்களாக செயல்படுகிறார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாணவர் ‘ரூட் தல’ என்ற பெயரில் தலைவராக இருப்பார். அவர்களில் யார் பெரியவர்? என்ற பிரச்சினை ஏற்படுவதால் பஸ்களில் வரும் மாணவர்களுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்படுகிறது.

அதுபோன்ற பிரச்சினையில் தான் அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுபோன்ற மோதலை தடுப்பதற்கு ‘ரூட் தல’யாக செயல்படும் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 90 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிரந்தர நீக்கம்

ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மாணவர்களின் செயல்பாட்டினை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

கையில் ஆயுதம் ஏந்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் மாணவர்களின் மோசமான செயல்பாட்டை இனிமேல் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்லூரி விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவர முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இந்த கூட்டத்தில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் சுகுணாசிங், மயிலாப்பூர் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் மனோகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் பயணிக்கும் 17 ரூட் பஸ்களில் பணியாற்றும் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


‘ரூட் தல’ என்பது யார்?

சென்னையில் 17 வழித்தடங்களில் (ரூட்களில்) செல்லும் மாநகர பஸ்கள் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கள் கல்லூரிகளுக்கு செல்கிறார்கள். ஒவ்வொரு வழித்தடத்தில் செல்லும் பஸ்களிலும் பயணிக்கும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு ஏற்ப குழுக்களாக செயல்படுவார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவராக இருப்பவரை ‘ரூட் தல’ என்று அழைக்கிறார்கள். அவர்களுக்கு இடையே யார் பெரியவன் என்பதில் தான் மோதல் ஏற்படுகிறது.

பஸ்களில் மட்டுமின்றி புறநகர் ரெயில்களிலும் இந்த ‘ரூட் தல’ பிரச்சினை உள்ளது.

Next Story