மகன் திருமணத்துக்கு அம்மா விதித்த நிபந்தனை!


மகன் திருமணத்துக்கு  அம்மா விதித்த நிபந்தனை!
x
தினத்தந்தி 4 Aug 2019 9:24 AM GMT (Updated: 4 Aug 2019 9:24 AM GMT)

அவள் ஓரளவு வசதிபடைத்த குடும்பத்து பெண்மணி. கணவர் இளம் வயதிலே மரணமடைந்துவிட்டார், ஆனாலும் மறுமணம் செய்துகொள்ளவில்லை.

அந்த பெண்மணிக்கு ஒரே ஒரு மகன். கணவர் செய்து வந்த தொழிலை அந்த பெண்மணியே தொடர்ந்து நடத்தி வந்தார். மகன் பள்ளிப்படிப்பை முடித்ததும், அவனை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிவைத்தார். அவனை தொழில்நிர்வாகம் தொடர்புடைய உயர் கல்வியை கற்கவைத்து, தனது தொழிலில் ஈடுபடுத்தி உச்ச நிலைக்கு வளரவேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. அவனுக்கு செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் சம்பந்தம் முடித்து, ஆடம்பரமாக திருமணம் செய்வித்து தனது அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

அவனும் வெளிநாட்டு படிப்பை முடித்துவிட்டு திரும்பினான். மகனுக்கு தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருந்த நிலையில், அவன் படித்த பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் இவனும் கலந்துகொண்டான். அவனோடு பிளஸ்-டூ படித்த மாணவிகளும் நிறைய பேர் பங்குபெற்றார்கள். அனைவரும் மனம்விட்டு பேசி, மகிழ்ச்சியுடன் அந்த நாளை கழித்தனர்.

பள்ளிக் காலத்தில் தனக்குப் பிடித்தமான தோழியாக இருந்த பெண்ணை அவன் மீண்டும் சந்தித்தான். அவள் முன்பைவிட அழகாக அவனை அதிகம் கவர்ந்தாள். அவர் களுடன் படித்த பெரும்பாலான பெண் களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவளுக்கு திருமணமாகியிருக்கவில்லை. மிக பின்தங்கிய குடும்பத்தில் அவள் பிறந் திருந்ததால் திருமணவாய்ப்பு அமையவில்லை. அவள் கால்சென்டர் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்தாள்.

இருவரும் மனம்விட்டுப் பேசினார்கள். அவள் இரவுப் பணியால் அவதிப்பட்டு கொண்டிருப்பதாக கூறியதும், அந்த வேலையில் இருந்து அவளை விலகும்படி கூறி, தனது நண்பன் ஒருவன் நடத்தி வந்த நிறு வனத்தில் அவளை வேலைக்கு சேர்த்துவிட்டான். அங்கு அவளுக்கு அதிக சம்பளமும், கூடுதல் சலுகைகளும் கிடைத்தது.

அவன் அவ்வப்போது சென்று அவளை சந்திப்பான். வேலைபார்க்கும் அலுவலகத்திலே அவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. சில நேரங்களில் அங்கிருந்து வெளியேயும் அழைத்துச்செல்வான். ஒருகட்டத்தில் அவர்கள் காதலர்கள் ஆகிவிட்டார்கள். அவளை திருமணம் செய்துகொள்ளவும் அவன் விரும்பினான்.

மகனுக்கு பெரிய இடங்களில் மணப்பெண் தேடிக்கொண்டிருந்த அந்த பெண்மணிக்கு அது அதிர்ச்சியை கொடுத்தது. தான் பார்த்து பேசிமுடிக்கும் வசதியுள்ள பெண்ணைதான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று மகனுக்கு நிபந்தனை போட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் தாயாரிடம் சொல்லிக்கொள்ளாமலே அவன், ஒருசில வாரங்கள் இமயமலை பகுதியில் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்றுவிட்டான். பின்பு எப்படியோ மகனை தேடிக்கண்டுபிடித்து அழைத்து வந்து, சமாதானம் செய்து அந்த பெண்ணையே திரு மணம் செய்துவைத்தார். ஆனால் அந்த புதிய மரு மகளை மாமியாருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. வேறு வழியே இல்லாததால் மகனுக்காக ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இரண்டு வயதானபோது, அவளது சித்தப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவரை பார்க்க இவள் குழந்தையோடு சென்றாள். அப்போது குழந்தையின் கழுத்தில் நான்கு பவுன் தங்க சங்கிலி ஒன்று கிடந்தது. சித்தப்பாவின் பிள்ளைகள், குழந்தையை பாசத்தோடு அங்கும் இங்கும் தூக்கிச்சென்றன.

மாலையில் வீடு திரும்பி வந்தபோது, குழந்தையின் கழுத்தில் கிடந்த சங்கிலியை காணவில்லை. அது பற்றி அவள் மாமியாரிடம் தெரிவிக்க, ‘நான்கு பவுன்தானே போனால் போகட்டும்’ என்று அமைதியாக சொன்ன மாமியார், அவளுக்கு தெரியாமலே அதிரடியாக காய் நகர்த்தினார்.

உடனே ரகசியமாக தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் அதை கூறி எப்.ஐ.ஆர். போடவைத்துவிட்டார். அடுத்து போலீசார் அவளது சித்தப்பாவின் வீட்டிற்கு சென்று, நோய்வாய்ப்பட்டிருந்த அவரையும், அவரது மனைவியையும், பிள்ளைகளையும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு இரவு முழுவதும் உட்காரவைத்துவிட்டார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த சித்தப்பா, அவமான மடைந்து மறுநாள் காலையில் வெளியே அனுப்பியதும் வீட்டில் போய் தற்கொலைசெய்துகொண்டார்.

அவரது தற்கொலை செய்தி தெரிந்து இவள் பதற்றத்தோடு அங்கு சென்றபின்புதான், தனது மாமியார் அவர்கள் மீது திருட்டுப் புகார் கொடுத்தது, விசாரணை நடந்தது அனைத்தும் அவளுக்கு தெரியவந்தது. ஆனால் குடும்பத்தினரோ அவள்தான் புகார்கொடுத்து விட்டாள் என்று நினைத்து அவள் மீது பழி சுமத்தினார்கள்.

அவள் கண்ணீரோடு திரும்பி வந்து மாமியாரிடம் நீதிகேட்க அவரோ, ‘உன் குடும்பமே சோற்றுக்கு வழி இல்லாதது. அதனால் நகை மீது ஆசைப்பட்டு திருடிவிட்டார்கள். போலீசுக்கு போனால்தான் நகை திரும்ப கிடைக்கும். அதனால்தான் புகார் செய்தேன். உன் சித்தப்பாதான் திருடி இருக்கிறார். அதனால்தான் அவர் தற்கொலைசெய்துகொண்டார்’ என்று கண்டபடி பேசியிருக்கிறார். இவளும் ஆத்திரப்பட்டு பதிலுக்கு பேச சண்டை உருவாகிவிட்டது.

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் அந்த மாமியார் தனக்கு நெருக்கமான சிலரை சந்தித்து, ‘அந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்கி என் மகனுக்கும்- மருமகளுக்கும் இடையே கசப்பை உருவாக்க என்ன வழி?’ என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்.

‘ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?’ என்று கேட்டதற்கு, ‘எனக்கு பிடிக்காத அவளை என் மகன் விவாகரத்து செய்ய வேண்டும். பின்பு அவனுக்கு எனக்கு பிடித்த இன்னொரு பெண்ணை திருமணம் செய்துவைக்கவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

(இதற்கிடையில் தற்கொலை செய்தவரை தகனம் செய்துவிட்டு வீடு திரும்பிய உறவினர்கள், வீட்டின் முன்னால் நிற்கும் பூஞ்செடி ஒன்றின் அடியில் இருந்து அந்த நான்கு பவுன் சங்கிலியை கண்டெடுத்திருக் கிறார்கள்)

வாழ்க்கையில் என்னவெல்லாம் எப்படி எல்லாம் நடக்குது பார்த்தீங்களா?!

- உஷாரு வரும்.

Next Story