மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பவில்லை: எடப்பாடி பழனிசாமி விளக்கம்


மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பவில்லை: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2019 10:30 PM GMT (Updated: 4 Aug 2019 10:29 PM GMT)

மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பவில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலம்,

சேலத்தில் நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இன்றைய தினம் சில பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்திருக்கின்றது. அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கவில்லை என்று ஒரு தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கு நான் விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்.

2017-18-ம் ஆண்டிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத்தலைவரின் மாநில நிதிநிலை மீதான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி பயன்பாடு குறித்து பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் குறித்து விளக்கம் அளிக்கின்றேன். அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்ற விதமாக இருக்கின்ற காரணத்தினாலே இதை தெளிவுபடுத்துவது அரசினுடைய கடமை என்ற காரணத்தால் இதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

சில பத்திரிகைகளில், 2017-18-ம் ஆண்டிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் மாநில நிதிநிலை மீதான அறிக்கையில் தமிழக அரசால் ஏறத்தாழ 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு வரப்பெற்ற மத்திய அரசின் மானியங்களை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி உள்ளதாக ஒரு தவறான கருத்து வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் வரவு செலவு மதிப்பீடு தயாரிக்கும் போது மத்திய அரசு திட்டங்களுக்கு எந்த அளவிற்கு மத்திய அரசு நிதி எதிர்பார்க்கப்படுகிறதோ அந்த அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன்மூலம் இத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்த இயலும். இந்த ஒதுக்கீடு மத்திய அரசிடமிருந்து அந்த நிதியாண்டில் விடுவித்து வரப்பெறும் மானியங்களின் அடிப்படையில் திட்ட பணிகளுக் காக விடுவிக்கப்படுகிறது. சில திட்டங்களுக்காக எதிர்பார்க்கப்படும் நிதி மத்திய அரசிடமிருந்து வரப்பெறவில்லை என்றால் மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அதற்காக செய்யப்படும் ஒதுக்கீட்டை அந்த ஆண்டு விடுவிக்காமல் அதை சேமிப்பாக கருதுகிறோம். தொடர்ந்து அடுத்து ஆண்டு மத்திய அரசிடமிருந்து நிதி வரப்பெறும்போது அந்த திட்டங்களுக்கான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதுபோன்ற இனங்களில், மாநில அரசு மத்திய அரசின் நிதியை பயன்படுத்தாமல் திருப்பி கொடுத்துள்ளது என்று கூறுவது ஒரு தவறான கருத்தாகும்.

எடுத்துக்காட்டாக, 2017-18-ம் ஆண்டு 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ள அடிப்படை மானியத்திற்காக 1516.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதற்கான முதல் தவணையான ரூ.758 கோடி தான் விடுவித்தது. எனவே, மாநில அரசால் இரண்டாவது தவணையான ரூ.758 கோடி விடுவிக்க இயலவில்லை. அந்த தொகை 2017-18-ம் ஆண்டு சேமிப்பாக கருதப்படுகிறது. 2018-19-ம் ஆண்டில் மாநில அரசால் எடுக்கப்பட்ட முயற்சிகளால் மத்திய அரசிடமிருந்து இந்த நிதியைப் பெற்று மாநில அரசு ஊராட்சிகளுக்கு விடுவித்தது.

அதேபோல் தான் பாரதப் பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசிடமிருந்து 2017-18-ம் ஆண்டில் பெறப்பட்ட தொகை குறைந்துவிட்ட காரணத்தால் மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை 2017-18-ம் ஆண்டு முறையாக விடுவிக்க இயலவில்லை. 2018-19-ம் ஆண்டு இந்த தொகை விடுவிக்கப்பட்டது.

எனவே, இதுபோன்ற திட்டங்களுக்கு அதே நிதியாண்டில் மத்திய அரசின் நிதி பெறப்படவில்லை என்கிற நிலையில் சேமிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்றவுடன் இந்த தொகைகளை மாநில அரசு விடுவித்து திட்டங்களை சீரான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, ஒருபோதும் மாநில அரசு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சியிலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் ஏற்பட்டிருந்தது. அதற்கான புள்ளிவிவரங்கள் எங்களிடம் இருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story