வெள்ளியங்கிரி மலையில் வீடுகள் கட்ட திட்டம்: விலங்குகளால் உயிரிழப்பு ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பு ஏற்காது-ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்


வெள்ளியங்கிரி மலையில் வீடுகள் கட்ட திட்டம்: விலங்குகளால் உயிரிழப்பு ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பு ஏற்காது-ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 12 Aug 2019 8:56 PM GMT (Updated: 12 Aug 2019 8:56 PM GMT)

வன விலங்குகளால் மனித உயிர் பலியானால், அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டில் வனத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

வெள்ளியங்கிரி வனப் பகுதியில் குடிசைமாற்று வாரியம் வீடுகள் கட்டும் இடத்தில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது என்றும், வன விலங்குகளால் மனித உயிர் பலியானால், அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டில் வனத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வி.லோகநாதன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஆலந்துறை களிமங்கலம் பகுதியில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1,500 வீடுகளும், பேரூர் செட்டிப்பாளையம் கிராமத்தில் 2,500 வீடுகளும், பச்சன வயல் கிராமத்தில் 70 வீடுகளும் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டுமானங்களை அதிக அளவில் கட்டிவருவதால் யானைகள் அடிக்கடி எங்களது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைபயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்து வருகிறது. சிறுத்தைகளும் அவ்வப்போது இங்கு வந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி செல்கிறது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிவிட்டால் அதை வைத்தே வனப்பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கவும், ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எளிதாக பட்டா உள்ளிட்ட பிற அனுமதிகளை வழங்குவதற்காக இதுபோன்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதற்கு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்துக்கு தமிழக வனத்துறை வழங்கியுள்ள தடையில்லா சான்றிதழ் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த தடையில்லா சான்றில் வித்தியாசமான நிபந்தனைகளை வனத்துறை விதித்து இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

ஆலந்துறை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 29 ஆயிரம் சதுர மீட்டருக்கு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இந்த பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்த பகுதிகளில் வீடு கட்டினால், மனிதர்கள்-விலங்குகள் மோதல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே கீழ்கண்ட நிபந்தனைகளுடன், தடையில்லா சான்று வழங்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். குடியிருப்புகளுக்குள் யானை வருவதை தடுக்க, அந்த குடியிருப்பை சுற்றி அகழி அமைக்க வேண்டும். வனவிலங்குகளின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள கேமரா உள்ளிட்ட முன்னெச்சரிக்கை உபகரணங்களை இப்பகுதிகளில் பொருத்த வேண்டும்.

குடியிருப்புகளை சுற்றி மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வந்தால், அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. வனவிலங்கு நடமாட்டத்தை தடுக்கும் விதமான தடைகளை ஏற்படுத்தக்கூடாது. இயற்கையான நீரோடைகளை தடுக்கக்கூடாது.

யானை உள்ளிட்ட வனவிலங்குகளினால் கட்டிடங்கள் சேதம் அடைந்தாலோ, மனித உயிர் பலிகள் ஏற்பட்டாலோ அதற்கு வனத்துறை பொறுப்பு ஏற்காது. பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறையினரிடம் இழப்பீடு எதுவும் கேட்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைத்தனர்.

“பொதுவாக ஒரு திட்டத்தினால், எந்த பாதிப்பும் இல்லை என்றால் மட்டுமே தடையில்லா சான்றுகள் வழங்கப்படும். ஆனால், பாதிப்பு இருக்கும், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்ற வித்தியாசமான நிபந்தனைகளுடன், தமிழக வனத்துறையினர் தடையில்லா சான்று அளித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது” என்று மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் கூறினார்.

Next Story