மு.க. ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை; துணை முதல் அமைச்சர் பேட்டி
மு.க. ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க நீலகிரிக்கு வரவில்லை என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மண்சரிவு, சாலை துண்டிப்பு போன்றவை ஏற்பட்டது. மேலும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். நீலகிரியில் பெய்த பலத்த மழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
நீலகிரிக்கு சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டார். அதற்கு முன் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன். மு.க. ஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க நீலகிரிக்கு வரவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 1,350 வீடுகள் சேதமடைந்து உள்ளன. முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு பதில் மாற்று வீடுகள் கட்டித்தரப்படும்.
நீலகிரியில் விளைநிலங்களில் பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4.37 கோடி ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மழை, வெள்ளத்தால் ரூ.199.23 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்திய குழுவை அனுப்பி நீலகிரியில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story