தேசிய விருது, காஷ்மீர் விவகாரம், அரசியல்கட்சி தொடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்தின் பதில்கள்:-


தேசிய விருது, காஷ்மீர் விவகாரம், அரசியல்கட்சி தொடக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்தின் பதில்கள்:-
x
தினத்தந்தி 14 Aug 2019 1:30 PM GMT (Updated: 14 Aug 2019 1:37 PM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி காந்தியிடம் தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாதது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில், “தமிழ் திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டாதது கட்டாயம் ஏமாற்றம் அளிக்கிறது. இதுதொடர்பாக தேர்வுக்குழுதான் பதிலளிக்க வேண்டும்.” என்றார். 

பிரதமர் மோடி - அமித்ஷாவை கிருஷ்ணா - அர்ஜுனன் என குறிப்பிட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், 
மிகவும் முக்கியமான பிரச்சனையான காஷ்மீர் விவகாரத்தை மிகவும் ராஜதந்திரத்துடன் மோடியும், அமித்ஷாவும் கையாண்டுள்ளனர். எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய்வீடாகியுள்ளது. அங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மிகவும் நேர்த்தியான முறையில் மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதனால்தான் பாராட்டினேன். 

மத்திய அரசுக்கு பெரும்பான்மையில்லாத மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்து, பின்னர் மக்களவையில் தாக்கல் செய்தனர். அவர்களுடைய ராஜதந்திரம் வெற்றியடைந்துள்ளது என்றார். 

காஷ்மீர் விவகாரம் முக்கியமாக தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, இவ்விவகாரத்தில் எதை அரசியல் ஆக்க வேண்டும் எதை அரசியல் ஆகக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். 

அரசியல் கட்சி அறிவிப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக சொல்கிறேன் என்று பதில் அளித்த ரஜினிகாந்த், போயஸ் கார்டன் மீண்டும் அரசியல் மைய தளமாகுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதில் உரைத்துள்ளார்.

Next Story