நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாக்களை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாக்களை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:47 PM GMT (Updated: 14 Aug 2019 11:47 PM GMT)

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாக்களை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் இரண்டு நீட் மசோதாக்கள் ஏகமனதாக, ஒருமனதாக 1.2.2017 அன்று நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவை எந்த நிலையில் இருக்கிறது என்று 28.6.2018 அன்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜனாதிபதி அதை நிறுத்தி வைத்திருக்கிறார். ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நம்முடைய அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது என்று பதிலளித்தார்.

ஆனால் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திரும்பியே வந்து விட்டன என்ற உண்மையை பேரவைக்கும், பேரவையின் மூலமாக நாட்டுக்கும், தெரிவிக்காமல் மறைத்தார். அந்த மசோதாக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அனுப்பி வைத்ததையும் மறைத்தார்.

ஒப்புதல் அனுப்பி விட்டாலே, மறுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதாகத்தான் பொருள். இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதா, நிறுத்தி வைக்கப்பட்டதா என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில் நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தைக் கூட கூட்டத்தயார் என்று முதல்-அமைச்சரே அறிவித்தார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுகளை அ.தி.மு.க. அரசு படித்துப் பார்த்தாலே நீட் மசோதாக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டது; மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை ஜனாதிபதி அனுப்பி வைக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

ஆனால் நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றி, அனுப்பி வைத்து மத்திய பா.ஜ.க. அரசை சங்கடப்படுத்தக்கூடாது என்ற உள்நோக்கத்துடன், விளக்கம் கேட்கிறோம் என்ற போர்வையில் கடிதங்களை எழுதி, அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்து வருகிறது. மத்திய பா.ஜ.க அரசுடன் நீட் விவகாரத்தில் ஒத்திசைந்து போக வேண்டும் என்பதற்காக, தமிழக சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை நீர்த்துப்போக வைக்கவே முதல்-அமைச்சர் பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சரும் கடித நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் செயலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் துணை போயிருக்கிறார்கள். தங்களின் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நீட் மசோதாக்களை பலி கொடுத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளார்கள். இருவரின் துரோகச் செயலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது.

ஆகவே கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல், ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் அவையில் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும்; அனுப்பி வைத்துவிட்டு சும்மா இருக்காமல், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமரைச் சந்தித்து நேரில் வலியுறுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

Next Story