மோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்


மோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:57 PM GMT (Updated: 14 Aug 2019 11:57 PM GMT)

மோடி-அமித்ஷாவை, கிருஷ்ணன்-அர்ஜூனன் என கூறியது ஏன்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் ரஜினிகாந்திடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி- தேசிய விருது பட்டியலில் தமிழ் மொழி படங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறதே?

பதில்:- தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அது என்ன சமாசாரம் என்பது குறித்து அந்த தேர்வுக்குழு தான் பதில் அளிக்க வேண்டும்.

கேள்வி:- மோடியும்-அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜூனன் போன்றவர்கள் என்று நீங்கள் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

பதில்:- காஷ்மீர் விவகாரம் ராஜதந்திரத்துடன் கையாளப்பட்டது. ஒருவர் திட்டத்தை சொல்பவர், இன்னொருவர் அந்த திட்டத்தை செயல்படுத்தியவர் என்பதால் தான் கிருஷ்ணன்-அர்ஜூனன் என்று கருத்து தெரிவித்தேன். காஷ்மீர் விவகாரம் தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. காஷ்மீர் தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு தாய் வீடாக உள்ளது. பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ நுழைவுவாயிலாக இருக்கிறது. அந்த காஷ்மீரை கைப்பற்ற ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். முன்கூட்டியே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பிரச்சினைக்குரியவர்களை வீட்டு காவலில் வைத்து அதன்பிறகே முறையாக நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். இது அருமையான ராஜதந்திர நடவடிக்கை.

இதை ஒரு விவாத பொருளாக்கி எல்லா விஷயமும் தெரிந்து சம்பந்தப்பட்டவர்கள் விழித்து கொண்டிருந்தால் இந்த நடவடிக்கை சாத்தியமே கிடையாது. தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசிலாக்குவது? எதை அரசியலாக்க கூடாது? என்பதை உணரவேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம். அதற்காகத்தான் அந்த கருத்தை நான் கூறினேன்.

கேள்வி:- உங்கள் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்?

பதில்:- அதை நிச்சயமாக சொல்வேன். உங்களிடம் சொல்லாமல் இருக்கமாட்டேன்.

கேள்வி:- தமிழகத்தின் அரசியல் மையமாக மீண்டும் போயஸ் கார்டன் மாறுமா?

பதில்:- காத்திருந்து பாருங்கள்.

மேற்கண்டவாறு ரஜினிகாந்த் பதில் அளித்தார்.

Next Story