அத்திவரதர் தரிசனம் - நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது - ஆட்சியர் பொன்னையா


அத்திவரதர் தரிசனம் - நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது - ஆட்சியர் பொன்னையா
x
தினத்தந்தி 15 Aug 2019 3:12 PM GMT (Updated: 15 Aug 2019 3:12 PM GMT)

அத்திவரதர் தரிசனம் செய்ய நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்,

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1–ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1–ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

 46– வது நாளான இன்று அத்திவரதர் ஏலக்காய் மாலை, துளசி மாலை, ரோஜாப்பூ மாலை, தாமரை பூமாலை என்று மலர் அலங்காரத்தில் வெண்பட்டு அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் தனிவரிசையில் சக்கர நாற்காலி மூலம் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணியுடன் அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வரிசையில் காத்திருந்தவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  

இந்நிலையில் அத்திவரதர் தரிசனம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது.  அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதையடுத்து நாளை மறுநாள் 17-ம் தேதி (சனிக்கிழமை) அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. 

இது குறித்து ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அத்திவரதர் தரிசனம் செய்ய நாளை (16-ம்தேதி) எந்தவித பாஸ்களும் செல்லாது. காலை 5 மணி முதல் இரவு வரை பொதுதரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். விஐபி, விவிஐபி, ரூ.300 மற்றும் ரூ.500 கட்டண தரிசனங்கள் உள்ளிட்ட எந்த சிறப்பு தரிசனமும் நாளை கிடையாது எனவும் கூறியுள்ளார்.

Next Story