காலநிலை மாற்ற அபாயத்தை தடுக்கக்கோரி பசுமை தாயகம் சார்பில் பிரசார இயக்கம் - டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார்


காலநிலை மாற்ற அபாயத்தை தடுக்கக்கோரி பசுமை தாயகம் சார்பில் பிரசார இயக்கம் - டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 10:17 PM GMT)

காலநிலை மாற்ற அபாயத்தை தடுக்க அவசரநிலை பிரகடனத்தை அறிவிக்கக்கோரி பசுமை தாயகம் சார்பில் பிரசார இயக்கத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கிவைத்தார்.

சென்னை,

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை தடுக்க அவசரநிலை பிரகடனத்தை உடனே அறிவிக்கக்கோரி பசுமை தாயகம் சார்பில் பிரசாரம் இயக்கம் நேற்று நடந்தது. பிரசார இயக்கத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

இதில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சவுமியா அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரசார இயக்கத்தில் ‘காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அறிவிப்போம். பூவுலகம் அழியாமல் காப்பாற்றுவோம்’ என்ற கோஷத்தை டாக்டர் ராமதாஸ் சொல்ல, அதில் கலந்து கொண்ட அனைவரும் திருப்பி சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

உலகம் அழிவின் விளிம்பு நிலையில் இருக்கிறது. 11 ஆண்டுகளுக்குள் புவி வெப்பத்தை குறைக்கவில்லை என்றால், உலகம் பாதி அளவு அழிந்துவிடும். 2050-ம் ஆண்டுக்குள் புவி வெப்பத்தை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், உலகம் முழுவதும் அழிந்துவிடும். மனிதன் மட்டுமல்லாது, அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ முடியாது.

எனவே அனைத்து அரசுகளும், அமைப்புகளும், நிறுவனங்களும் காலநிலை மாற்றம் குறித்த அவசரநிலை பிரகடனத்தை உடனே அறிவிக்க வேண்டும். பாமரமக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோருக்கும் இதை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் ஒன்றுதிரட்டி காலநிலை அவசரநிலை செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

காலநிலை மாற்றத்தை உணர்ந்த பெரிய நாடுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. நாமும் அதை தமிழ்நாட்டில் பின்பற்றலாம். இளைஞர்கள் அனைவரும் மின்சார வாகனத்துக்கு (இ-பைக்) மாற வேண்டும். பசுமை கட்டிட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

உலக நாடுகளே காலநிலை மாற்றம் குறித்து அவசரநிலை பிரகடனத்தை கொண்டு வர முயற்சித்து வரும் நிலையில், இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு கொண்டுவரவேண்டும். மக்களுக்கும் இதை புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து டாக்டர் ராமதாசிடம், ‘வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?’ என்று நிருபர் கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அது முடிந்தது. முடிந்துபோனதை பற்றி பேசி என்ன பிரயோஜனம்?’ என்றார்.

Next Story