காதல் விவகாரத்தில் டிரைவர் அடித்துக்கொலை சிறுவன் உள்பட 11 பேர் கைது


காதல் விவகாரத்தில் டிரைவர் அடித்துக்கொலை சிறுவன் உள்பட 11 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2019 10:00 PM GMT (Updated: 21 Aug 2019 8:21 PM GMT)

காதல் விவகாரத்தில் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை, 

காதல் விவகாரத்தில் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதல்-எதிர்ப்பு

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பெருமாக்கநல்லூர் தெற்கு குடியான தெருவை சேர்ந்த சதாசிவம் மகன் சூர்யா (வயது 22). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் கருணாகரன்(42). இவர், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய உறவினரான 17 வயது சிறுமி ஒருவரும், சூர்யாவும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சூர்யாவும், அந்த சிறுமியும் கடந்த 18-ம் தேதி திடீரென தலைமறைவாகி விட்டனர்.

வீட்டை சூறையாடினர்

இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு பெருமாக்கநல்லூருக்கு வந்து சூர்யாவின் குடும்பத்தினரை தாக்கி, அவருடைய சரக்கு ஆட்டோவையும், வீட்டையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதற்கு பதிலடியாக சூர்யாவின் உறவினர்கள் ஒன்று திரண்டு சிறுமியின் உறவினர் கருணாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி, அவருடைய வீட்டை சூறையாடினர்.

அடித்துக்கொலை

இந்த மோதல் சம்பவத்தில் கருணாகரன் கட்டையால் தாக்கப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கருணாகரன் பரிதாபமாக இறந்தார்.

11 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரன் மீது தாக்குதல் நடத்தியதாக பெருமாக்கநல்லூரை சேர்ந்த அய்யப்பன்(24), கார்த்தி(28), தினேஷ்(25), குருமூர்த்தி(30), பிரகாஷ்(24), மணிகண்டன்(24), சரவணன் (39), சங்குபிள்ளை(50), பொன்னுசாமி(52), செல்லப்பா(42) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பெருமாக்கநல்லூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story