ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு; 300 ஆசிரியர்களே தேர்ச்சி என அதிர்ச்சி தகவல்


ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியீடு; 300 ஆசிரியர்களே தேர்ச்சி என அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2019 3:31 AM GMT (Updated: 22 Aug 2019 3:31 AM GMT)

ஆசிரியர் தகுதி 2வது தாள் தேர்வில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை,

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினார்கள்.

தேர்வு முடிவும், தேர்வுக்கான விடைக்குறிப்பும் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியானது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியானது குறித்து சென்னை அடையாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

தேதியை அறிவித்த உடன் எங்கு காலி பணியிடங்கள் இருக்கிறதோ? அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும். ஆன்-லைன் முறையில் நடைபெற்று முடிந்த தேர்வில் ஒரு சிறு தவறு கூட நடக்கவில்லை.

அதேபோல் கலந்தாய்வும் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும். இதற்கான பணிகளை துரிதப்படுத்தவும், மிகவிரைவிலேயே பணி நியமன ஆணை வழங்குவதற்கும் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்’ என்றார்.

ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றிருந்தனர்.  இந்நிலையில், ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்தன.

ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதிய நிலையில் சுமார் 300க்கும் அதிகமான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  முதல் தாள் தேர்வை போன்று இந்த தேர்விலும் 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.  99 சதவீதத்தினர் தோல்வி அடைந்துள்ளது ஆசிரியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Next Story