வகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால்: தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை


வகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால்: தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2019 11:15 PM GMT (Updated: 22 Aug 2019 10:09 PM GMT)

வகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால் தண்டவாளத்தில் தலையை வைத்து, என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் தீபக் (வயது 19). இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற தீபக் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். இருப்பினும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று காலையில் நாமக்கல்லில் உள்ள திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். தலை துண்டிக்கப்பட்டு தனியாக கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் ரெயில்வே போலீசார் அந்த வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், அந்த வாலிபர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பாத தீபக் என்பதும், அவர் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் தலையை வைத்து, தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வகுப்பறையில் மாணவர் தீபக் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்ததாகவும், அதனை கண்ட பேராசிரியர் மாணவனை கண்டித்ததோடு, செல்போனை பறிமுதல் செய்து பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வருமாறு கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த தீபக் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை எனில் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story