மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 12:15 AM GMT (Updated: 23 Aug 2019 9:54 PM GMT)

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து இருப்பதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாகன சோதனையும் தீவிரப் படுத்தப்பட்டு இருக்கிறது.

சென்னை,

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆனார்கள்.

இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிலர் சிக்கினார்கள்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலைகள் காரணமாகவும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் சென்னையிலும், தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த சூழ்நிலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை போன்று இந்தியாவிலும் அதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியது. காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தால், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் நாடு முழுவதும் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து மத்திய உளவுத்துறை நேற்று முன் தினம் மதியம் 2 மணி அளவில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதிக்கு அவசர கடிதம் ஒன்றை இ-மெயில் மூலம் அனுப்பியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன. இந்துக்கள் போன்று மாறுவேடமிட்டு, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு நுழைந்திருக்கும் பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்துக்களை போன்று நெற்றியில் விபூதி பூசியும், திலகமிட்டும் அவர்கள் மாறுவேடத்தில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது அந்த பயங்கரவாத குழு கோவையில் இருக்கிறது.

முக்கிய மத வழிபாட்டு தலங்கள், வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு அந்த பயங்கரவாத குழு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

மேலும் முக்கிய பாதுகாப்பு துறை அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், மத்திய-மாநில அரசுகளின் முக்கிய அலுவலகங்களில் தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. இதேபோல் இந்து மத தலைவர்கள் மற்றும் வழிபாட்டு தலங்களையும் இலக்காக நிர்ணயிக்கக்கூடும். எனவே அனைத்து மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நுண்ணறிவு பிரிவின் செயல்பாடுகள் உடனடியாக ‘உஷார்’ நிலையை அடையவேண்டும்.

ஊடுருவியவர்கள், மர்ம நபர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இதேபோல சட்ட விரோதமாக படகுகளில் ஊடுருவல்காரர்கள் நகர்வு இருக்கிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். இந்த தகவலை மீனவர்களுக்கு அதிகாரிகள் குழு தெரிவித்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க சொல்ல வேண்டும்.

உளவுத்துறையை தகவலை தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்து விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாத வகையில், பயங்கரவாதிகள் இலக்காக நிர்ணயித்துள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உடனடியாக, இந்தத் தகவலை போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு தெரிவித்ததுடன், தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தரவு பிறப்பித்தார். மேலும், கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக திரியும் படகுகளையும் கண்காணிக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டை கண்டறியும் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்குள் நுழையும் வாகனங்களை, போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

சென்னை சென்டிரல், எழும்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் தொடர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் திரியும் நபர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

விநாயகர் சிலை ஊர்வலத்தை சீர்குலைக்க சதியா? விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையில் செப்டம்பர் 4 மற்றும் 6-ந் தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த ஊர்வலத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்றும், அதன் அடிப்படையிலேயே பயங்கரவாதிகள் கோவையில் ஊடுருவி இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவலை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா உள்பட 4 பேரும், 3 இணை கமிஷனர்களும், 12 துணை கமிஷனர்களும், 2 நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறையில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் சென்னை மாநகரில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. வாகன சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, கோவை விரைந்த போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் - ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி, நேற்று கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன், பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினார்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். துப்பாக்கி ஏந்திய 80 கமாண்டோ வீரர்கள், 50 அதிவிரைவுப்படையினரும் அவர்களுடன் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். கோவை விமானநிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

மலை மாவட்டமான நீலகிரிக்கு நுழைவு வாயிலாக விளங்கும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். வனப்பகுதி வழியாக செல்லும் சாலைகள் அனைத்திலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூரிலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டியில் தங்கும் விடுதிகள், ஓட்டல், காட்டேஜ்களில் சோதனை நடத்தப்படுகிறது.

கோவையில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகள் குறித்து அங்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரைச் சேர்ந்த ரகீம் கொல்லியல் என்கிற அப்துல் காதர் என்பவர் மூலம் 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளனர். அப்துல் காதர் வளைகுடா நாடுகளில் வேலை செய்தபோது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். தலைமறைவாக இருக்கும் அவரை, தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்து தேடி வருகிறார்கள்.

அவர் தனது நண்பருடன் சேர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த இலியாஸ் அன்வர் என்ற ஒரு பயங்கரவாதி, இலங்கையைச் சேர்ந்த தமிழ்பேசும் 5 பயங்கரவாதிகள் என 6 பேரை இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக கேரளாவுக்கு அழைத்து வந்து, அடைக்கலம் கொடுத்து உள்ளார். இலியாஸ் அன்வர் தவிர மற்ற 5 பேரில் 2 பேர் மாறு வேடத்தில் உலா வருகிறார்கள். அதில் ஒரு நபர் சென்னம்பல கேசவராவ் என்ற பெயரில் தமிழகத்தில் உலா வருவதாக தெரிகிறது. மற்ற 4 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பயங்கரவாதிகள் ஊடுருவலை தொடர்ந்து ராமேசுவரத்திலும் மற்றும் கடல் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளிலும் சோதனை போடப்படுகிறது. கோவில் வளாகம், பாம்பன் பாலத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மதுரை, கடலூரிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Next Story