ராசிபுரம் அருகே கருணாநிதியின் நினைவாக ரூ.30 லட்சத்தில் பகுத்தறிவாலயம்


ராசிபுரம் அருகே கருணாநிதியின் நினைவாக ரூ.30 லட்சத்தில் பகுத்தறிவாலயம்
x
தினத்தந்தி 25 Aug 2019 8:03 PM GMT (Updated: 25 Aug 2019 8:03 PM GMT)

ராசிபுரம் அருகே கருணாநிதியின் நினைவாக ரூ.30 லட்சத்தில் பகுத்தறிவாலயம் கட்டப்பட உள்ளது.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிக்காட்டில் அருந்ததியர் இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அருந்ததியர் இனத்தவருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கினார். இதில் படித்த பலர் வேலை வாய்ப்பு பெற்றனர்.

இதையொட்டி அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக குச்சிக்காட்டை சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் கருணாநிதிக்கு கலைஞர் ‘பகுத்தறிவாலயம்’ என்ற பெயரில் கட்டிடம் கட்ட முடிவு செய்தனர்.

இதற்காக ‘அருந்ததியர் முன்னேற்ற பேரவை’ என்ற அறக்கட்டளையை ஏற்படுத்திய அவர்கள் புதிய கட்டிடம் கட்டுவதற்காக அவர்கள் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள நிலத்தை விலைக்கு வாங்கினர்.

அதில் ரூ.30 லட்சம் மதிப்பில் கருணாநிதிக்கு பகுத்தறிவாலயம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் கருணாநிதியின் உருவச்சிலை, பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அருந்ததியர் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த பகுத்தறிவாலயம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. பட்டணம் பேரூர் தி.மு.க. செயலாளர் பொன்.நல்லதம்பி இதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தி.மு.க. கட்சியினர், அருந்ததியர் இனத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Next Story