காருக்குள் விளையாடிய குழந்தை மூச்சுத்திணறி சாவு மூடிய கதவை திறக்க முடியாததால் பரிதாபம்


காருக்குள் விளையாடிய குழந்தை மூச்சுத்திணறி சாவு மூடிய கதவை திறக்க முடியாததால் பரிதாபம்
x
தினத்தந்தி 25 Aug 2019 11:15 PM GMT (Updated: 25 Aug 2019 10:15 PM GMT)

தூத்துக்குடியில் காருக்குள் விளையாடிய 2 வயது குழந்தை, மூடிய கதவை திறக்க முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி புதுகிராமத்தை சேர்ந்தவர் ரோகித். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ரியானா சம்தா (வயது 2). ரோகித் கடந்த 14-ந் தேதி குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

நேற்று மதியம் குழந்தை ரியானா சம்தா வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து குழந்தையை காணாததால் வீட்டில் இருந்தவர்கள் தேடிப்பார்த்தனர். நீண்ட நேரமாக அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தையை பற்றிய விவரம் தெரியாமல் தவித்தனர். அப்போது, வீட்டில் நின்ற காரை பார்த்தனர். அந்த காருக்குள் குழந்தை ரியானா சம்தா மயங்கிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கார் கதவை திறந்து குழந்தையை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக் காக குழந்தையை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை ரியானா சம்தா பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தை விளையாடிய போது, கார் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் காருக்குள் ஏறிய குழந்தை கதவை மூடி உள்ளது. அதன் பிறகு கதவை திறக்க தெரியாததால் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story