திருப்போரூர் கோவில் அருகே குண்டு வெடித்ததில் மேலும் ஒருவர் சாவு ராணுவத்தில் பயன்படுத்தும் குண்டா? என விசாரணை


திருப்போரூர் கோவில் அருகே குண்டு வெடித்ததில் மேலும் ஒருவர் சாவு ராணுவத்தில் பயன்படுத்தும் குண்டா? என விசாரணை
x
தினத்தந்தி 26 Aug 2019 11:00 PM GMT (Updated: 27 Aug 2019 3:48 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி கங்கையம்மன் கோவில் அருகே குண்டு வெடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இது ராணுவத்தில் பயன்படுத்தும் குண்டா? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள குளத்தினை தூர்வாரும் பணி நேற்று முன்தினம் நடைப்பெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆயில் மோட்டார் மூலம் குளத்தில் இருந்த தண்ணீர் இறைக்கப்பட்டு பின்னர் குளக்கரையை சுத்தப்படுத்தும் போது, இரும்பால் ஆன மர்ம பொருள் ஒன்று கிடைத்தது. அதனை எடுத்து வந்த வாலிபர்கள் கோவில் அருகே வைத்து அதை உடைக்க முயன்றனர். அப்போது அந்த மர்மபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். மர்மபொருள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த மானாமதியை சேர்ந்த ஜெயராம் (வயது 28), திலீபன் (25), யுவராஜ் (25), திருமால் (22), விசுவநாதன் மற்றும் சூர்யா (22) உள்பட 6 பேர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு, உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார்.

பலியான சூர்யா கூவத்தூரை அடுத்த குண்டு மணிசேரியை சேர்ந்தவர். தனது மாமா வீட்டுக்கு வந்திருந்த போது பலியாகி விட்டார். மற்ற 5 பேரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை திலீபன் (25) சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மர்ம பொருள் வெடித்து சிதறிய இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் மானாமதியில் குண்டு வெடித்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

ராணுவ குண்டா?

ஓய்வு பெற்ற ராணுவ வெடிகுண்டு நிபுணர் ஜெயராம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதர் ஒன்றிலிருந்து வெடிக்காத மர்ம பொருளை கைப்பற்றினர். அவற்றை சோதித்து பார்த்ததில் அது குண்டு என்று தெரியவந்தது. உடனே சென்னையிலிருந்து மோப்ப நாய் வாலி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் எங்கேயாவது வெடிகுண்டுகள் உள்ளதா? என வெடி குண்டு நிபுணர்கள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜ், டி.ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சோதனையில் அது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குண்டு என்று தெரிய வந்துள்ளது. இந்த ராணுவ குண்டு எவ்வாறு இந்த பகுதிக்கு வந்தது?, அருகில் உள்ள அனுமந்தபுரம் ராணுவ பயிற்சி முகாமிலிருந்து வெடித்து சிதறியவையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் திருப்போரூர் அருகே பழமையான கோவில் அருகே இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில் வாலிபர் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story