“2 இலங்கை வாலிபர்களை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்?” ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு-போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


“2 இலங்கை வாலிபர்களை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்?” ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு-போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Aug 2019 10:44 PM GMT (Updated: 28 Aug 2019 12:11 AM GMT)

புழல் சிறையில் அடைக்கப்பட்ட 2 இலங்கை வாலிபர்களை விடுவித்தது தொடர்பாக ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு, போலீஸ் அதிகாரிகள் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

இலங்கையை சேர்ந்தவர்கள் சங்கசிரந்தா(வயது 34), முகமது சப்ராஸ்(33). இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். பின்னர் தமிழகத்தை சேர்ந்தவர்களின் பெயர்களில் போலி ஆதார் கார்டு தயாரித்து, இங்கு சுற்றித்திரிந்துள்ளனர். அவர்கள் இருவரையும் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது இலங்கையில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

திருப்பி அனுப்பக்கோரி வழக்கு

அதில், ‘எங்களை தேவையில்லாமல் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இங்கிருந்து வழக்கு விசாரணைக்காக ராமநாதபுரம் செல்வது அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இங்குள்ள உணவுப்பழக்கம் எங்களுக்கு ஒத்துப்போகவில்லை. எனவே எங்கள் மீது பதிவு செய்த வழக்கை கேணிக்கரை போலீசார் திரும்ப பெறவும், எங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

இதனால் நாங்கள் தேவையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். எனவே எங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி இலங்கை துணைத் தூதரகத்தில் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சிறையில் இருந்து விடுவிப்பு

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மனுதாரர்கள் மீதான வழக்கு முடிக்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்“ என்றார்.

எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும்போது, மனுதாரர்கள் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கியூ பிராஞ்ச் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, புழல் சிறையின் கண்காணிப்பாளர், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர், ராமநாதபுரம் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு ஆகியோர் 29-ந் தேதி (அதாவது நாளை) நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story